Skip to main content

இளைஞரின் கொடூரச் செயலால் விக்கித்து நின்ற பெங்களூர்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

A young man who dragged an old man in a cart; Busy in Bangalore

 

வாகனத்தை இடித்ததால் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவரை இருசக்கர வாகனத்தின் பின்னாலேயே சாலையில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியுள்ளார். காரை ஓட்டி வந்த முதியவர் இளைஞரிடம் இதுபற்றி கேட்க இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன்பின் முதியவரின் பேச்சை அலட்சியப்படுத்திய இளைஞர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளார்.

 

இதனால் அந்த முதியவர் சட்டென இருசக்கர வாகனத்தின் பின்பகுதியைப் பிடித்து அவரை நிறுத்த முற்பட்டுள்ளார். முதியவர் வாகனத்தைப் பிடித்தது தெரிந்தும், அந்த இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை முதியவரை இழுத்துச் சென்றுள்ளார். இதனைக் கண்ட பிற வாகன ஓட்டிகள் இளைஞரை மடக்கிப் பிடித்தனர். 

 

ஒரு கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதால் ஆடைகள் கிழிந்த நிலையில் முதியவர் காயமடைந்தார். தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் 25 வயது சாஹீல் என்பதும், காரை ஒட்டி வந்தவர் 71 வயதான முத்தப்பா என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாஹீலைக் கைது செய்தனர். காயமடைந்த முத்தப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இளைஞர் முதியவரை இழுத்துச் செல்லும்போது அவர்களுக்கு பின்னால் காரில் வந்த ஒரு நபர் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்