Skip to main content

நான்காவது அலையை காணும் உலகம்.. விரைவில் இரட்டிப்பாகும் ஒமிக்ரான் பாதிப்பு - எச்சரிக்கும் மத்திய சுகாதாரத்துறை!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

union health secretary

 

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இன்று (24.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன், உலகம் நான்காவது கரோனா அலையைச் சந்தித்துவருவதாகவும், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக ராஜேஷ் பூஷன் கூறியுள்ளதாவது, “உலகம் நான்காவது அலையைக் கண்டுவருகிறது. மேலும், நாட்டில் கரோனா உறுதியாகும் சதவீதம் 6.1% ஆகவுள்ளது. எனவே, நாம் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பினைத் தளர்த்திக்கொள்ள முடியாது.  ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் வாரந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரிப்பைக் காணும் அதேவேளையில், ஆசியாவில் வாராவாரம் பாதிப்புகள் குறைந்துகொண்டேவருகிறது.

 

இந்தியாவின் 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 358 ஒமிக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 114 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை டிசம்பர் 21ஆம் தேதி, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், படுக்கை எண்ணிக்கை போன்றவற்றை அதிகரிக்க வேண்டுமென்றும், கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர்களில் 89% பேர் முதல் டோஸைப் செலுத்திக்கொண்டுள்ளனர். தகுதியானவர்களில் 61% பேர் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இன்று நம்மிடம் தேசியளவில் 18,10,083 தனிமைப்படுத்தப்படும் படுக்கைகள், 4,94,314 ஆக்சிஜன் படுக்கைகள், 1,39,300 ஐசியு படுக்கைகள், 24,057 குழந்தைகளுக்கான ஐசியு படுக்கைகள் மற்றும் 64,796 குழந்தைகளுக்கான சாதாரண படுக்கைகள் உள்ளன.

 

டெல்டாவை விட ஒமிக்ரான் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சித் தன்மையைக் கொண்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதன் அர்த்தம் ஒமிக்ரான் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதாகும். ஒமிக்ரான் பாதிப்புகள் 1.5 - 3 நாட்களுக்குள் இரட்டிப்பாகும். எனவே கரோனா பாதுகாப்பு நடத்தையைப் பின்பபற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனா டெல்டாவுக்கான சிகிச்சை நெறிமுறைகள் ஒமிக்ரானுக்கும் பொருந்தும். கரோனா முதல் அலையைவிட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை 10 மடங்கு அதிகரித்தது. இதனால், நாளொன்றுக்கு 18,800 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சராசரியைவிட குறைவாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு 11 மாநிலங்கள் கவலைக்குரியவையாக இருக்கிறது.” இவ்வாறு ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி.... கேரளா விரைகிறது மத்தியக் குழு! 

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

One person in Kerala confirmed with Monkey Pox....Kerala rushes Central Committee!

 

 

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்தியக் குழு. 

 

"ஜூலை 12- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்திய குழு. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை மத்தியக் குழு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

மதுரை எய்ம்ஸுக்கு ஜப்பான் நிறுவனம் ரூபாய் 1,500 கோடி ஒதுக்கீடு! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Japanese company allocates Rs 1,500 crore to Madurai AIIMS

 

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதற்கட்டமாக ரூபாய் 1,500 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

 

மதுரை மாவட்டம், தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கட்ட மொத்த திட்ட மதிப்பான ரூபாய் 1,977 கோடியில், தற்போது ரூபாய் 1,500 கோடியை ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகவும், மீதமுள்ள நிதியை வரும் அக்டோபர் மாதம் 26- ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.