
ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த பெண், தன்பாலின ஈர்ப்பாளரான தன் காதலியின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த புகாரில், ‘தானும், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களுடைய காதல், என்னுடைய காதலியின் பெற்றோருக்குத் தெரிய வந்ததுள்ளது. அதனால், எங்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தெரிந்து கொண்ட நாங்கள் இருவரும் டெல்லிக்குச் சென்று தங்கினோம்.
இதனையடுத்து, என்னுடைய காதலியின் பெற்றோர் காவல்நிலையத்தில் என் மீது கடத்தல் புகார் அளித்தனர். புகார் அளித்த விஷயம் தெரிய வந்ததும், நாங்கள் இருவரும் காவல்நிலையத்திற்குச் சென்று எங்களுடைய நிலைமையை தெரிவித்தோம். ஆனால், அந்த காவல்நிலையத்தில் என் காதலியின் உறவினர் முன்னிலையில் எங்களை அடித்து துன்புறுத்தினர். அதன்பின், என் காதலியை உத்தரப் பிரதேசத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து குடும்பத்திற்குத் தெரியாமல் என்னுடைய காதலி தொலைப்பேசி மூலம் பேசினார். அதன் மூலம், அங்கு அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஹரியானா நீதிமன்றம், மனுதாரரின் காதலியை அடுத்த விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளது.