
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் சூழலில், கோழி, வாத்து போன்ற பறவைகளின் கறியைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
கேரளா, இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்5 என்1 எனப்படும் இந்த வைரஸ், கோழி மற்றும் வாத்துகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பறவைகளின் இடப்பெயர்வு காலத்தில் இந்நோய் பறவைகளை அதிகம் தாக்கும். அந்தவகையில் இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியது.
நாடு முழுவதும் இந்தப் பறவை காய்ச்சலால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், அம்மாநில கால்நடைத் துறையினரின் துரித நடவடிக்கையால் குட்டநாடு, ஆலப்புழா, கோட்டயம், கைப்புழம் உட்படப் பல பகுதிகளில் 40,000க்கும் அதிகமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் அழிப்புப் பணிகள் தொடர்கின்றன. இதன் காரணமாகப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் பண்ணை உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை அறிவித்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். இந்நிலையில் கோழி, வாத்து போன்ற பறவைகளின் கறியைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில், கோழி, வாத்து போன்றவற்றைச் சாப்பிடும் முன்பு, அவற்றைச் சரியான முறையில் சுத்தம் செய்து நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்தால் இந்த வைரஸ் அழியும் என்பதால், உணவைக் குறைந்தது 70 டிகிரி செல்சியஸில் வேக வைப்பதன் மூலம் நமது உணவில் உள்ள இந்த கிருமிகள் அழிந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.