Skip to main content

சர்ச்சைக்கு மத்தியிலும் களைகட்டிய லட்டு விற்பனை; நான்கு நாட்களில் மட்டும் இத்தனை லட்சமா?

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
Weed Laddu Sale Amidst Controversy

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.

திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், திருப்பதி லட்டுவில் போதைப்பொருளான குட்கா பாக்கெட் இருந்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.  லட்டில் மிருக கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சையே இன்னும் முடியாத நேரத்தில் தற்போது குட்கா பாக்கெட் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திருப்பதி தேவஸ்தான குழு பாத்திமாவிடம் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்டில் மிருக கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க கோவிலில் சிறப்பு யாகம் செய்த திருப்பதி கோவில் நிர்வாகம், பக்தர்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி ' ஸ்ரீ வெங்கடேசா... நாராயணா...' என்று மந்திரங்களை உச்சரிக்க பக்தர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தோஷம் நீக்க யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்ட நிலையில் நம்பிக்கையுடன் பக்தர்கள் லட்டு வாங்கி செல்வதாகவும்  கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்