Skip to main content

வழக்கு தொடர்ந்த வாட்ஸ்அப்: புதிய விதி குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

ravishankar prasad

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

 

மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் மூன்று மாதங்கள் கழித்து அமலுக்கு வருமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் கடந்த 25ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் தற்போதுவரை வாட்சப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து, அமெரிக்காவில் இருக்கும் தங்களது தலைமை அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருப்பதால், புதிய விதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவெடுக்க 6 மாதங்கள்வரை  அவகாசம் கேட்டுவருகின்றனர்.

 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ்அப் நிறுவனம், ஒரு தகவலை முதன்முதலில் குறிப்பிட்ட சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் யார் என அரசு கேட்டால் சமூகவலைதளம், அந்த நபரைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்த தனது மனுவில் வாட்ஸ்அப், மத்திய அரசின் இந்தப் புதிய விதிமுறை இந்திய அரசியல் சட்டம், தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் செயலியில் தகவல் அனுப்பும் முறை என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால், முதன்முதலில் ஒரு செய்தியைப் பதிவிட்டவரைக் கண்டுபிடிக்க, தகவலைப் பெற்றவர்முதல் அனுப்பியவர்வரை அனைவரது என்கிரிப்ஷனும் உடைக்கப்பட வேண்டியதிருக்கும் எனவும் கூறியுள்ளது.

 

இதுகுறித்து நேற்று (26.05.2021) விளக்கமளித்த மத்திய அரசு, குடிமக்களின் தனியுரிமையை மதிப்பதாகவும், அதை மீறுவதற்கான நோக்கம் இல்லை எனவும் தெரிவித்தது. இந்தநிலையில், இன்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் நிறுவனம் எதிர்த்து வழக்கு தொடர்ந்த விதிகுறித்து விளக்கமளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "தனியுரிமையை அரசு முழுமையாக அங்கீகரிக்கிறது, மதிக்கிறது. சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிகளைப் பற்றி பயப்பட ஒன்றுமில்லை. புதிய விதியின் நோக்கமே, (புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள) சில குற்றங்களைச் செய்ய வழிவகுக்கும் செய்திகளை யார் முதலில் பரப்பியது என்பதைக் கண்டறிவதே. புதிய விதிகள், சமூக ஊடகங்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. கேள்வி கேட்கும் உரிமை உள்ளிட்ட விமர்சனங்களை அரசு வரவேற்கிறது. இந்தப் புதிய விதிகள், சாதாரண பயனர்கள் சமூக ஊடகங்களின் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்