Skip to main content

“வேலை கேட்போரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர்” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

"There are more employers than job seekers" - Union Minister Anurag Thakur

 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய இளைஞர் தின விழா வரும் 12-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து 2,500 இளைஞர்கள் பங்கேற்கின்றனர். அதனை முன்னிட்டு நிகழ்வு நடைபெறும் இடத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து தனியார் ஹோட்டலில் நடந்த விழாவில் தேசிய இளையோர் தின விழாவுக்கான லோகோ மற்றும் விழா தூதுவரான புதுச்சேரி மாநில விலங்கான அணில் கார்ட்டூன் படம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் முன்னிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டார். 

 

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இந்த நிகழ்வில் அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், "தேசிய இளைஞர் தின விழாவானது ‘திறன்மிகு இளைஞர்கள் - ஆற்றல் மிகு இளைஞர்கள்’ என்ற மைய கருத்தின் அடிப்படையில் நடைபெறும். அரவிந்தர், பாரதி, விவேகானந்தர் ஆகியோர் இளையோருக்கான முன்மாதிரிகள். பாரம்பரியத்தை இளையோருக்கு முன்னிறுத்த இந்த நிகழ்வை நடத்துகிறோம். பிரதமர் மோடி இந்நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த திருவிழாவை புதுச்சேரியில் நடத்துவதற்கு பிரதமர் விரும்பினார். அவர் நிகழ்வை தொடங்கி வைப்பதுடன் இளையோரிடம் கலந்துரையாடுகிறார். தேசிய இளையோர் தின விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து இளையோர்கள் வருவதால் புதுச்சேரியின் தனித்திறனை, தனித்தன்மையை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவும். இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் உரைகள் இந்த நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன" என்றார்.

 

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "கடந்த சில ஆண்டுகளில் வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளோம். புதிய நிறுவனங்களை தொடங்குவோர், சுய தொழில் புரிவோர், வங்கி சார்ந்த துறைகள், தொழில் முனைவோர் அதிகரித்துள்ளனர். வேலை கேட்போரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர். வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை, விரிவுபடுத்த செய்கிறோம். பிரதமர் உரையாற்றும் 'மான் கி பாத்' நிகழ்ச்சியை கேட்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தொலைபேசியில் கேட்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தியுள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பெறப்பட்ட பாலியல் புகார் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கிறோம்"  என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.