Skip to main content

கள்ளச்சாராய மரணம்; நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்த தேஜஸ்வி யாதவ்!

Published on 19/10/2024 | Edited on 19/10/2024
Tejashwi Yadav criticized Nitish Kumar in connection with illicit liquor

பீகார் மாநிலம் சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் உள்ள பலர், உள்ளூரில் இருக்கும் கடை ஒன்றில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். பின்பு வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது சிவான் மற்றும் சரண் மாவட்டங்களிலும் மொத்தம் 35க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து பலரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக  இரண்டு ஊராட்சி அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மாநில அரசு சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பீகார் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் எப்படி கள்ளச்சாராயம் கிடைத்தது? அரசின் மெத்தனப்போக்கின் காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இதற்கு காரணமானவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களைச்  சட்டத்தின் முன் நிறுத்தி உரியத் தண்டனை வாங்கி கொடுப்போம் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கள்ளச்சாராய மரணம் குறித்து நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசை ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்.ஜே.டி) கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், “பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷின் ஜே.டி.யு கட்சியினர்தான் இதன் மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்திலும் மூளை முடுக்கெங்கும் மதுக்கடைகளை தொடங்கியவர் தற்போது தன்னை மகாத்மா என்று வேஷம் போடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்