Skip to main content

'பாஜக பொழப்பு சிரிப்பாச் சிரிச்சுப்போச்சு...' – ஸ்டான்ட்-அப் காமெடி பெண்மணியின் சரமாரியான கிண்டல்!

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

பொழப்பு சிரிப்பாய் சிரிச்சுப்போச்சு என்று சொல்வார்கள் அல்லவா? அதுபோலத்தான் பாஜக அரசு நகரங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை புகழ்பெற்ற நகைச்சுவை காட்சிகளை நடத்தும் வாசு பிரைமலானி என்ற பெண்மணி கடுமையாக கிண்டலடித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாஜக அரசுக்கு பல்வேறு யோசனைகளை கூறியிருக்கிறார்.

 

vasu primalani



“அலகாபாதை பிரயாக் என்றும், ஃபைஸாபாத்தை அயோத்தி என்றும் பெயர் மாற்றிய பாஜகவினர், தற்போது தாஜ்மகாலை ராம் மகால் என்று மாற்ற யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்னதாக ஆக்ராவை அகர்வால் என்று மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். ஏனென்றால் ஆக்ராவில் அகர்வால்கள்தான் பெரும்பகுதியாக குடியிருக்கிறார்கள். இத்தகைய சிந்தனை தெய்வீகமானது. அற்புதமானது. தொலைநோக்குப் பார்வையும், புரட்சிகரமான என்னமும் கொண்டது. பாஜகவினர் இத்தகைய சிந்தனையை நிறுத்தாமல் பெயர் மாற்றங்களைத் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பெயர் மாற்றம் மட்டுமின்றி, நமது நடத்தைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக இந்த விஷயத்தில் சில யோசனைகள் வைத்திருக்கிறேன். இந்தியாவில் கடைபிடிக்கப்படும் எல்லாமும் இந்திய கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் தொடர்பானவை அல்ல. அவற்றை நாம் கைவிட வேண்டும். தீவாளியில் (Diwali) அலி (Ali) இருக்கிறது. மும்பையில் (Mumbai) பாய் (Bai) இருக்கிறது. மராத்தி வார்த்தையில் பாய் சரிதான். ஆனால், அம்மாவைக் குறிக்கும் மம் (Mum) என்ற ஆங்கில வார்த்தை இருக்கிறதே. அகமதாபாத்தில் அகமது இடம்பெற்று இருக்கிறது. அது நமக்கு ஆகாது. குஜராத் (Gujarat) என்ற வார்த்தையில் ரேட் (Rat)  என்ற ஆங்கில வார்த்தை இருக்கிறது. Rat என்றால் பெருச்சாளி என்றல்லவா அர்த்தம். ஆங்கிலத்தை நாம் எப்படி அனுமதிக்கலாம். இந்தியன் ஏர் ஃபோர்ஸை மூடவேண்டும். புஷ்பக விமானம் என்றுதான் அழைக்க வேண்டும். அதுபோலவே, மிஸைல்ஸ், பாம்ஸ், டேங்க் என்று பல ஆயுதங்களை பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் இந்தியாவில் கண்டுபிடித்தது இல்லை. இந்தியாவுக்கு சம்பந்தமும் இல்லாதவை. பிரம்மாஸ்திரா என்பதைக் காட்டிலும் பெரிய ஆயுதம் ஏதேனும் இருக்கிறதா சொல்லுங்கள். எனவே, பிரம்மாஸ்திரத்தை மட்டும் உபயோகப்படுத்துங்கள்.

 

vasu primalani pranab mukherji


கிரிக்கெட்டையும் நாம் விளையாடக்கூடாது. அதற்கு பதிலாக ஒருநாள்,  ஐந்து நாள் யோகா விளையாட்டுகளை மட்டுமே விளையாட வேண்டும். போக்குவரத்துக்கு கார்களையும், ரயில்களையும், ஏரோபிளேன்களையும் பயன்படுத்தக்கூடாது. அவற்றுக்காக தனித்தனியாக சாலைகளையும் போட வேண்டியிருக்கிறது. இவை நமது கலாச்சாரத்திலும் இல்லை. சாலைகளுக்கு அவசியமில்லாத மாட்டு வண்டிகள்தான் நமக்கு உகந்தவை. புஷ்பக் விமானம் நமது கலாச்சாரத்தில் இருப்பதால் அதை மட்டும் பயன்படுத்தலாம். தகவல்களை அனுப்புவதற்கு தொலைபேசிகளையும், மொபைல் போன்களையும் ட்விட்டரையும் பயன்படுத்துவதற்கு பதிலாக புறாக்களை பயன்படுத்த வேண்டும். மைக்ரோபோன்களை பயன்படுத்தி மேடைகளில் சில அரசியல்வாதிகள் பேசுவதாக கூறுகிறார்கள். மைக்ரோபோன்கள் நமது கலாச்சாரத்தில் இல்லை. அவரவர் குரலில் மட்டுமே பேசவேண்டும்.

கோமாதா என்று அழைக்கப்படும் நமது பசு, மாட்டுக் கொட்டகையில் வசிக்கின்றன. நமது அரசியல்வாதிகள் ஏன் நாடாளுமன்றக் கட்டிடத்தை தியாகம் செய்யக் கூடாது. மாட்டுக்கொட்டகையில் ஏன் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தக்கூடாது. பெட்ரோலும் இந்தியாவில் இல்லை. அரபு நாடுகளில் இருந்து வருவதால் அது முஸ்லிம் பெட்ரோல். அந்தப் பெட்ரோலை பயன்படுத்தி விஷ்ணுதேவி கோவில், திருப்பதி, சீரடி போன்ற கோவில்களுக்கு பயணம் செய்ய பாகிஸ்தான் சதி செய்கிறது. கண் கண்ணாடிகளை பயன்படுத்தக்கூடாது. ராமர் யாருக்கு எந்த அளவுக்கு பார்வை கொடுத்திருக்கிறாரோ அந்த பார்வையோடு வாழப் பழக வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட வெளிநாட்டு காய்கறிகளை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். கோக், பெப்ஸி, டீ, காபி போன்ற எதுவுமே இந்தியாவுக்கு சொந்தமானதில்லை. அவற்றைத் தடை செய்ய வேண்டும். எனவே, ஒரு பகுதி வேலையை மட்டும் செய்யாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நகரங்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல், நமது கலாச்சாரத்துக்கு எதிரான எல்லாவற்றையும் நிராகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் சரமாரியாக யோசனை கூறியிருக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.