கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம் சென்னிதலா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் (96). இவரது மனைவி பாரதி (86). இவருக்கு விஜயன் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை 3:30 அளவில் ராகவன் வீட்டில் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த கிராம மக்கள், போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள், வீடு முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. வீட்டில் எரிந்து பற்றி எரிந்த தீயில் சிக்கிய ராகவன் மற்றும் பாரதியின் உடல்கள் கருகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்து விவகாரத்தில் பெற்றோருடன் விஜயன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், பெற்றோர் இருந்த வீட்டை விஜயன் தீ வைத்து எரித்ததாக தெரியவந்தது. அதன் பேரில், விஜயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.