Skip to main content

“ஏழு கோடி கன்னடர்களையும் மத்திய அரசு அவமதித்துவிட்டது” - சித்தராமையா காட்டம்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
 Siddaramaiah says Central government has insulted all 7 crore Kannadas

2024 ஆம் ஆண்டின் 75வது குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. மேலும், தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. டெல்லியில், ஒவ்வொரு ஆண்டிலும் குடியரசு தினவிழாவின் போது அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அந்த மாநில அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதற்காக மத்திய அரசு முன்கூட்டியே, மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும். 

அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்கள் மாநில ஊர்திகளின் மாடல்களை அனுப்பியிருந்தது. அதன்படி, கர்நாடகா மாநில ஊர்திகளை சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பியிருந்தது. ஆனால், கர்நாடகா அரசு அனுப்பியிருந்த அனைத்து பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் ஊர்திக்கு அனுமதி அளிக்காததன் மூலம் ஏழு கோடி கன்னடர்களை மத்திய அரசு அவமதித்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதில் கர்நாடகா ஊர்திக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்கவில்லை. இதன் மூலம், மத்திய அரசு ஏழு கோடி கன்னடர்களை அவமதித்துள்ளது. கடந்த ஆண்டும் கூட கர்நாடகா அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு வாய்ப்பு அளிக்க மறுத்தது. அதன் பின்னர், கர்நாடகா சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதித்தனர். இப்போது இந்த முறையும் கன்னடர்களை இழிவுபடுத்தும் போக்கை மத்திய அரசு தொடர்ந்துள்ளது. 

 Siddaramaiah says Central government has insulted all 7 crore Kannadas

மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நியாய ஊர்தி, நீர்ப்பாசனம், பேக்கிங் அடிப்படை வசதிகள் வளர்ச்சி, மைசூரை முன் மாதிரி ராஜ்ஜியமாக உருவாக்கிய நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஊர்தி, பெங்களூரில் கிராம தேவதை, 10ஆம் நூற்றாண்டில் கட்டிய அன்னம்மா தேவி கோவில் ஊர்தி உட்பட நான்கு ஊர்திகளுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.  ஆனால், மத்திய அரசு, எங்கள் வேண்டுகோள் அனைத்தையும் நிராகரித்துவிட்டது. மாநிலத்தின் சாதனை மற்றும் சாதனையாளர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பை மத்திய அரசு பறிக்கிறது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருப்பதை, பா.ஜ.கவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. வரிப்பகிர்வு முதல் வறட்சி நிவாரணத்தில் அநீதி வரை, கன்னடர்களால் கட்டப்பட்ட வங்கிகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்பது வரை மத்திய அரசு தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது, ​​அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததன் மூலம், மீண்டும் எங்கள் அடையாளத்தைத் தாக்கியுள்ளது.

கர்நாடகா பா.ஜ.க இந்த அநீதியை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. பா.ஜ.க எம்.பி.க்கள் நரேந்திர மோடியின் கைப்பாவையாகி விட்டனர். அவர்கள் யாருக்கு விஸ்வாசமாக இருக்கிறார்கள்? கன்னடர்களுக்கா? அல்லது நரேந்திர மோடிக்கா?. கன்னடம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதால் கன்னடர்கள் ஏற்கெனவே கொதிப்படைந்துள்ளனர். அவர்களின் பொறுமையை மத்திய அரசு சோதிக்கக் கூடாது. இனியும் தாமதிக்காமல், மத்திய அரசு தனது தவறை உடனடியாக சரிசெய்து, கவுரவமிக்க குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகா அலங்கார ஊர்திக்கு அனுமதித்து கர்நாடகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.