Skip to main content

“உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை” - ராகுல்காந்தி உருக்கம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Rahul Gandhi wrote letter to wayanad people

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். 

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவைக் கடந்த 17ஆம் தேதி அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.  அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி கடந்த 18ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில், வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய அந்த கடிதத்தில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு உங்களை சந்தித்து உங்கள் ஆதரவை கேட்டு வந்தேன். நான் உங்களுக்கு அந்நியனாக இருந்தாலும், நீங்கள் என்னை நம்பினீர்கள். அளவற்ற அன்புடனும் பாசத்துடனும் என்னைத் தழுவிக் கொண்டீர்கள். நீங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

நாளுக்கு நாள் நான் அவமானப்படும் போது, ​​உங்களுடைய நிபந்தனையற்ற அன்பு என்னைப் பாதுகாத்தது. நீங்கள் தான் என்னுடைய அடைக்கலம், என் வீடு, என் குடும்பம். நீங்கள் என்னைச் சந்தேகித்ததாக நான் ஒரு கணம் கூட உணரவில்லை. எனக்காக நீங்கள் செய்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தேவைப்படும் போது, நீங்கள் கொடுத்த அன்பு எனக்குப் பாதுகாப்பாக இருந்தது. நீங்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதி. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் எப்போதும் இருப்பேன்.

ஊடகத்தின் முன் நின்று எனது முடிவைச் சொன்னபோது என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்களைப் பாதுகாக்க எனது சகோதரி பிரியங்கா காந்தி இருப்பார் என்பதால் ஆறுதல் அடைகிறேன். நீங்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தால், அவர் உங்கள் எம்.பி.யாக சிறப்பாக பணியாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

‘பேக் டூ ஃபார்ம்’ - ராகுலின் செயலால் உறைந்துபோன நாடாளுமன்றம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Rahul gandhi performance in Parliament has surprise many people

இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறுபக்கம், இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி.. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தியை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

இன்னொருபுறம், 18வது மக்களவைக்கான சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 26ம் தேதியான இன்று நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததால்.. தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரைத் தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன. அதற்காக, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அழுத்தம் தந்ததாகவும் செய்திகள் உலாவின.

முன்னதாக மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு.. ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது, அரசியல் சாசன பிரதியைக் கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆரவாரக் கோஷங்களை எழுப்பி தங்களது பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தினர். பின்னர், சபாநாயகர் இருக்கைக்குச் சென்று அவருக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்கூறி ராகுல் கை குலுக்கினார். அப்போது, நாடாளுமன்ற பாதுகாவலர் எனச் சொல்லப்படும் நபர்கள் இருவர் நின்றனர். அதுவரை பதவியேற்ற ய யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ராகுல் சக மனிதனை மதிக்கும் விதமாக, அவரிடம் வலியச் சென்று கைகுலுக்கினார். அவருடன் நின்ற மற்றொருவரிடமும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுதான் தலைமைப் பண்பு.. இவர்தான் தலைவர் எனப் பலரும் இந்த வீடியோ காட்சியைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல.. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கேரள மாநிலத்தின் மாவேலிக்கரை தொகுதியின் எம்.பி.யுமான அவர், எட்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று முற்பகல் 11 மணிக்கு மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்கள் வழி மொழிந்தனர். இதேபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் பெயரை திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். அப்போது, பிரதமர் மோடி இன்முகத்தோடு ராகுலை அழைத்தார். இதனால் சபை ஆர்ப்பரித்தது. பின்னர், அனைவரும் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசினர். ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றது ஜனநாயகத்துக்கு புது ரத்தம் பாய்ச்சப்போகிறது எனக் காங்கிரசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.