
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு, இராணுவத்தின் ஆர் அண்ட் டி மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாகவும், நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு ஆகியவையும் அவருக்கு ஏற்பட்டிருப்பதால் அதற்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.