
உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லாதால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா. 53 வயதான இவர் வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். சுரேஷ் சந்திராவிற்கு நீண்ட காலமாக அடிவயிற்றில் வலி இருந்துள்ளது.
மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு இடது பக்க சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அலிகார் குரேஷி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு சுரேஷ் சந்திராவுக்குத் தெரிந்தவர் பரிந்துரை செய்துள்ளார்.
இதன் பின் தெரிந்த நபர் சொன்ன மருத்துவமனைக்குச் சென்ற சுரேஷ் சந்திராவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். மருத்துவமனையில் அவருக்குச் சிறுநீரகக் கற்களை அகற்ற அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. சிகிச்சை முடிந்த பின் மீண்டும் அடி வயிற்றில் வலிவர வேறொரு மருத்துவரை சந்தித்துள்ளார். அவரைப் பரிசோதித்த புதிய மருத்துவர், சுரேஷ் சந்திராவை ஸ்கேன் செய்யும்படி கூறியுள்ளார்.
ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது இடது பக்க சிறுநீரகம் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய விளக்கம் தராததால் அரசு அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார். அரசின் கதவுகளை சுரேஷ் சந்திரா தட்டிய பிறகு தான் இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையால் தனது சிறுநீரகத்தின் ஒரு பகுதி திருடப்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை மீது சுரேஷ் சந்திரா புகார் அளித்த பின்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் மருத்துவ நிர்வாகம் மீது உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.