பாஜக மூத்த தலைவரும், எம்.பி யுமான அனந்த் குமார் ஹெக்டே, பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, "ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது. மேலும் அது நேர்மையான போராட்டமே இல்லை. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம், சத்யாகிரகம் ஆகியவையும் ஒரு நாடகம்தான்" என்று பேசினார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அனந்த் குமார் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மோடி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கர்நாடகா மாநில பாஜக தலைவர் நளின் குமார் காட்டீல், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும், இந்த பேச்சு குறித்து விளக்கம் கேட்டு அனந்த் குமார் ஹெக்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.