![mobile online game children incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/W_S_9xXEcuGdoAoqWyy9ylV38xTT3vArjLLzbVKbpC4/1612292953/sites/default/files/inline-images/mobile%20games%20444.jpg)
செல்ஃபோனில் நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் 16 வயது மகன் தர்ஷன். இவர், செல்ஃபோனில் 'ஃபயர்வால்' எனும் ஆன்லைன் கேமை நீண்ட நேரம் விளையாடியுள்ளார். அப்போது, காதில் ஹெட்செட் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென சுய நினைவை இழந்து மயங்கிவிழுந்தார்.
இதைப் பார்த்த சிறுவனின் பெற்றோர் உடனடியாகச் சிறுவனை வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்பர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர்.
ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.