
முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளை நவம்பர் 1- ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கான 2020- 2021 கல்வியாண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

அதில் "கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம். அக்டோபர் மாத இறுதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட வேண்டும். முதல் பருவத்தேர்வுகள் 2021- ஆம் ஆண்டு மார்ச் 8- ஆம் தேதி முதல் மார்ச் 26- ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டு, ஏப்ரல் 4- ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும். ஏப்ரல் 5- ஆம் தேதி முதல், இரண்டாம் செமஸ்டர் வகுப்புகள் தொடங்கும். இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டு, விடுமுறை விடப்படும். 2021- 22 ஆம் கல்வியாண்டு, முதல் செமஸ்டர் மாணாக்கர்களுக்கு ஆகஸ்ட் 30- ஆம் தேதி தொடங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.