
காதல் விவகாரத்தில் தந்தையே மகளை கொன்ற நிலையில் காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகா மாநிலம் கோலாரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட் தாலுகாவில் உள்ள போடகுர்கி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. இளங்கலைப் பட்டப் படிப்பு பயின்று வந்த கீர்த்தி வேறொரு சமூகத்தைச் சேர்ந்த கங்காதர் என்ற இளைஞரை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க கீர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கீர்த்திக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மகள் பின்வாங்காததால் ஆத்திரமடைந்த தந்தை கிருஷ்ணமூர்த்தி கீர்த்தியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் நாடகமாடியுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரித்த போலீசார் நடந்தது தற்கொலை அல்ல, கொலை என கண்டுபிடித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தனது காதலி கொல்லப்பட்ட விவரத்தை அறிந்த காதலன் கங்காதர் கடும் வேதனையில் சுற்றித்திரிந்த நிலையில் திடீரென ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதலர்களான கீர்த்தி மற்றும் கங்காதரின் உடல்களைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் ஒரே நாளில் அடக்கம் செய்தது அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.