Skip to main content

உதவி செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; கணவரின் நண்பர் வெறிச்செயல்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

kerala ernakulam young woman and young man incident 
ஆதிரா - அகில்

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பாலக்கடவு என்ற பகுதியை சேர்ந்த சனல் என்பவருடைய மனைவி ஆதிரா (வயது 27). சனலின் நண்பர் அகில் (வயது 31). அகிலும் ஆதிராவும் அங்கமாலியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.

 

அகிலுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் சமயங்களில் தனது பணம் மற்றும் நகையைக் கொடுத்து ஆதிரா உதவி செய்து வந்துள்ள நிலையில், தான் கொடுத்த பணத்தை அகிலிடம் இருந்து திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தகராறில் முடிந்துள்ளது.

 

இந்நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஆதிராவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிராவின் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில் இதுகுறித்து அங்கமாலி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஆதிராவின் தொலைபேசியை ஆய்வு செய்த போது அவர் கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது. மேலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கடந்த 29 ஆம் தேதி ஆதிராவை அகில் காரில் அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து அகிலை தேடி வந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆதிரா கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியதாகத் தெரிவித்தார்.

 

இதையடுத்து அதிரப்பள்ளி ஆற்றுப்பகுதிக்கு சென்று ஆற்றின் கரையில் கிடந்த ஆதிராவின் உடல் பாகங்களைக் கைப்பற்றிய போலீசார், அதனை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இளம்பெண் ஒருவர் தான் கடனாக கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதற்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்