Skip to main content

“நியாயம், நீதி, நேர்மை எங்கு இருக்கிறது?” - கனிமொழி எம்.பி.

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
 Kanimozhi says Amit Shah should do what Advani did

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோடியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி. இன்று (16-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி அங்கு இருந்தார். இது மிகவும் பாதுகாப்பான ஒரு இடமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நிச்சயம் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும். கடந்த முறை பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுபோன்று தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், அந்த நியாயத்தை கேட்டு போராடிய எங்களை இடைநீக்கம் செய்துள்ளார்கள் என்றால் இதில் நியாயம், நீதி, நேர்மை எங்கு இருக்கிறது?” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்