Skip to main content

அடுத்தகட்ட சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ!

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Isro preparing for the next achievement

 

இதுவரையில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

 

இந்நிலையில் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டிருந்தது. ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். அதன்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் டிவி- டி1 ராக்கெட் மூலம் இன்று (21.10.2023) காலை 8 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்கலம் விண்ணில் பாய உள்ளது தரையில் இருந்து 16.6 கி.மீ. தூரம் வரை விண்கலம் அனுப்பப்பட உள்ளது.

 

இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து பாராசூட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை 20 நிமிடத்தில் நிறைவு பெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்