
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பல சிம் கார்டுகளை வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. தனிநபர்கள் தங்கள் பெயரில் பல சிம் கார்டுகளை வைத்திருப்பதால் சட்ட மற்றும் நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், நாட்டில் நடக்கும் குற்றச்செயல் பலவற்றுக்கு தொலைப்பேசி சாதனமே என்று கூறப்படுகிறது. இதனால், தொலைப்பேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அதன்படி, 2023ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு சட்டத்தின்படி, கடுமையாக விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதில், ஒரு தனிநபர் 9 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். ஆனால், அவர் 10 சிம் கார்டுகளையோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தாலோ அவர்களுக்கு ரூ50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் ஒருவர் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் வரை தான் வைத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை முதல் முறையாக மீறினால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். அந்தக் குற்றம் தொடருமானால் அதிகபட்சமாக அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சிம் கார்டுகளைப் பெறுவதற்கு வேறு ஒரு பெயரை யாராவது மோசடியாகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், பயனரின் அனுமதியின்றி வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் போன்ற பல விதிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.