!["I will give healthy advice to the government in allocating portfolios to ministers" - Tamilisai Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/TWgC2j83q_-6VdNsiPj7juAayJYl73toQc0LwFGb6NM/1626067485/sites/default/files/inline-images/tamilisai-1.jpg)
புதுச்சேரியில் இன்று (12.07.2021) 100 மையங்களில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. வீராம்பட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4வது தடுப்பூசி திருவிழாவைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது, “வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் நான்காவது முறையாக தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஆரோக்கியமாக நல்ல எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. தற்போது மக்களிடம் தயக்கம் நீங்கியிருக்கிறது.
புதுச்சேரியில் நேற்றுமுதல் கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. புதுச்சேரியில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாளை மறுநாள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மக்களுடன் என்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள இருக்கிறேன். டெங்கு பரவாமல் இருக்க அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் புதுவை முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் மழை நீரை சேமிக்கலாம்” என்று கூறினார்.
அவரிடம் செய்தியாளர்கள் அமைச்சர்கள் இலாகா தாமதம் குறித்து கேட்டதற்கு, “அமைச்சரவை இலாகா பங்கீட்டில் ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது. இருப்பினும் ஆரோக்கியமான ஆலோசனை வழங்குவேன்” என்று கூறினார்.