Skip to main content

கூகுள் டூடுல் கவுரவித்த முதல் மலையாள பட நாயகி; யார் இந்த பி.கே.ரோஸி?

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

First Malayalam heroine honored by Google Doodle; Who is this PK Rossi?

 

இந்தியாவின் நான்காவது பெரிய திரைப்படத்துறையாகக் கருதப்படும் கேரள திரைத்துறை. தென்னிந்தியாவின் மலையாள மொழியிலிருந்து வெளியாகும் திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் கதை சார்ந்த யதார்த்தத்திற்காக இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

 

இந்தியாவில் பெண்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளான காலகட்டத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த பி.கே. ரோஸி என்பவர் கேரளத்தில் 1930ல் வெளிவந்த முதல் படமான 'விகதகுமாரன்' என்னும் வசனங்களற்ற திரைப்படத்தில் நடித்தார். ஜே.சி. டேனியல் தயாரித்து இயக்கிய இப்படம் ஒரு நாயர் பெண்ணை மையமாகக் கொண்டது. இதில் அந்த நாயர் பெண் வேடத்தில் பி.கே. ரோஸி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், காக்கராஷி என்ற தமிழ் நாடக வடிவத்தில் மிகத் திறமையான நடிப்பை பெற்றிருந்த பி.கே. ரோஸியை அடையாளம் கண்டு கேரளத்தில் எந்தப் பெண்ணும் நடிக்க முன்வராத சூழலில் முதல் படத்திலேயே ரோஸியை நடிக்க வைத்தவர் ஜே.சி. டேனியல்.

 

ரோஸி நடித்த திரைப்படத்தை, பார்க்க வரக்கூடாதென நாயர் சமூகத்தில் பெரும் செல்வந்தர்களாக இருந்தவர்களும் சமூகத்தில் செல்வாக்குடன் இருந்தவர்களும் பி.கே.ரோஸியை தடுத்துள்ளனர். மேலும் திரையரங்கை கற்கள் கொண்டு வீசியும், திரையைக் கொளுத்தியும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். பல்வேறு நெருக்கடிகளுக்காளாகி கேசவப்பிள்ளை என்பவரை மணந்து தமிழகம் வந்தவர் ராஜம்மாளாக அடையாளங்கள் மறைத்து வாழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 2022ல் அவரது வாழ்க்கையைத் தழுவி 'பிகே ரோஸி' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சசி நடுக்காடு என்பவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவின் கேரளத்தில் பிறந்த பட்டியலினப் பெண்ணான ரோசம்மா பின்பு பி.கே.ரோஸியாகி சாதிய நெருக்கடியால் ராஜம்மாளாக வாழ்ந்து மறைந்துள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு 120 ஆவது பிறந்த நாளில்  அவருக்கு புகழ்சேர்க்கும் விதமாக Google doodle பி.கே. ரோஸியின் புகைப்படத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்