Skip to main content

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Father Periyar's Birthday Celebration Filed case on behalf of Vishwa Hindu Parishad

 

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியைச் சென்ற வருடம் சமூகநீதி நாள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து உறுதி மொழியும் ஏற்றது. அதன்படி இந்த வருடமும் பெரியாரின் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்படப் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 

இந்நிலையில், உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் குறாரா பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளனர். அந்த விழாவில் அமர் என்பவர், "கடவுளைப் படைத்தவன் முட்டாள், கடவுளைப் பிரச்சாரம் செய்பவன் 'தூசி' (பொல்லாதவன்). மேலும் கடவுளை வணங்குபவன் பெரிய முட்டாள். இதுதான் உண்மை" எனப் பேசியுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் (வலது சாரி அமைப்பு) செப்டம்பர் 19 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது. இந்நிலையில், விழாவில் கலந்து கொண்ட அமர் சிங்க், டாக்டர் சுரேஷ், அத்வேஷ், அசோக் வித்யார்த்தி ஆகியோர் மீது 295 (ஒரு வகுப்பினரின் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் பேசுவது), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்)வின் கீழ் வழக்கு தொடுத்துள்ளனர்.

 

நால்வரும் பகுஜன் சமாஜ் கட்சியினர், பீம் ஆர்மியைச் சேர்ந்தவர்கள் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கைதான நால்வரில் ஒருவரின் சகோதரர், வழக்கறிஞர் ஹர்டௌல் சிங்க், "அவர்கள் எந்த இயக்கத்திலும் இல்லாத சமூக சேவை செய்து வரும் தலித்துகள். நால்வரும் பெரியாரின் கருத்துகளைக் கூறி விழிப்புணர்வு தான் ஏற்படுத்தினார்கள். பெரியாரும், சாதி வெறியையும் மக்களை பக்தர்களாக மாற்றும் அனைத்து மதச் சடங்குகள் மற்றும் சிலைகளை விமர்சித்துள்ளார். ஆனால், தற்போது எனது சகோதரர் மன அழுத்தத்திலும் பயத்திலும் இருக்கிறார்.” கூட்டத்தில் சுமார் 150 பேர் இருந்ததாகவும், அவர்கள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும். பின்னர், குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள்  மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டதாகவும் ஹர்டெளல் கூறினார்.

 

விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த அமித் ரஜாவத் தனது புகார் மனுவில், "அவர்கள் இந்து கடவுள்களை அவமதித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள ஒருவர், குழந்தைகள் உட்பட மக்கள் முன்னிலையில் இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் அவமதிக்கும் வார்த்தைகளால் பேசியுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பின்பு இது குறித்து ரஜாவத் கூறுகையில், "நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் இவர்கள் ஈடுபட்டார்களா என்பது இப்போது நிச்சயமற்றது. அவர்களில் யாரேனும் நிரபராதி என்றால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு பகுஜன் சமாஜ் கொடிகள் இருந்ததைக் காண முடிந்தது. எனவே, பிற மதத்தைப் பற்றித் தவறாகப் பேச, எந்த மதமும் அறிவுறுத்தவில்லை" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.