Skip to main content

வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் - வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

electronic voting machine in bjp candidate car

 

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 27ஆம் தேதி முதல், பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல், கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இம்மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (01.04.2021) நடைபெற்றது.

 

இந்தநிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த சிலமணி நேரங்கள் கழித்து, அசாமைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பதைப் போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அந்தப் பதிவில் அவர், "பதர்கண்டி பாஜக வேட்பாளர் கிருஷ்ணெந்து பால் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சூழ்நிலை பதற்றமாகியுள்ளது" என கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

 

 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜகவை விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் ஆணையம் இதுகுறித்து தீவிரமாக செயலாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுசென்று சிக்கும் தனியார் வாகனங்களின் வீடியோக்கள் வெளியாகும். ஆச்சரியப்படத்தக்க வகையில் இல்லாமல் அதில் சில விஷயங்கள் பொதுவாக இருக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், பொதுவாக பாஜக வேட்பாளர்கள் அல்லது அவர்களது நண்பர்களுக்கு சொந்தமானவையாக இருக்கும். அந்த வீடியோக்கள் எப்போதாவது ஒருமுறை நடந்த சம்பவமாக எடுத்துக்கொள்ளப்படும். உண்மைக்குப் புறம்பானவை என நிராகரிக்கப்படும். வீடியோக்களை வெளியிட்டவர்களை, பாஜக தனது ஊடக இயந்திரங்களைப் பயன்படுத்தி ‘காயம்பட்ட தோல்வியாளர்கள்’ என குற்றஞ்சாட்டும்" என தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து அவர், "உண்மை என்னவென்றால், இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகின்றன. அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் இந்தப் புகார்களில் தீவிரமாக செயல்படத் தொடங்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு தொடர்பான தீவிர மறுமதிப்பீடு அனைத்து தேசிய கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்