Skip to main content

500 குழந்தைத் திருமணங்களைத் தடுத்த தனி ஒருவன்!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

கல்வியும் அதன் வழியிலான பொருளாதார முன்னேற்றமும் குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்தி இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் இதற்கு பஞ்சமே கிடையாது. ஆனால், அதற்கெதிராக அனைவரும் களமிறங்கி குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவேண்டும் என்று முழக்கமிடுகிறார் அசாமைச் சேர்ந்த தனி ஒருவன்!
 

Child marriage


சிக்கிம் மணிப்பால் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்த யாரும் இந்தியாவின் பெருநகரம் ஒன்றில் இயங்கிவரும், பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். ஆனால், அசாம் மாநிலம் துப்ரி மாவட்டம் தெற்கு தோக்ரெகோரா கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் ரகுமான், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக தன் வாழ்க்கையையே அற்பணித்திருக்கிறார். 
 

துப்ரி மாவட்டம் வங்கதேசத்தின் எல்லைப்புறத்தை நெருங்கிய பகுதி. இங்கு வங்காளம் பேசும் இஸ்லாமியர்கள் மற்றும் படிப்பறிவில்லாத ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் குழந்தைகளை 12 - 13 வயதே நிரம்பியிருந்தாலும், குடும்பச் சூழலைக் காரணம்காட்டி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால், குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாத அக்குழந்தைகள், பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு கையாள முடியாமல் உடல்நலக் குறைவு, பிரச்சனைகளைச் சந்திப்பதோடு, இறுதியில் அந்த திருமண உறவு விவாகரத்தில் முடிகிறது. 
 

Child marriage


இலியாஸ் ரகுமான், 2015ல் 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதைத் தடுப்பதற்காக சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். ஆனால், அவர்கள் ரகுமானின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். அடுத்த சில தினங்களில் 12 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு போய் பார்த்தபோது, அவர்களின் குடும்பப் பிரச்சனையில் மூக்கை நுழைக்காதே எனக்கூறி விரட்டிவிட்டனர். மனம் தளராத இலியாஸ் காவல்துறை உதவியோடு அந்தத் திருமணத்தை நிறுத்தினார். 
 

இன்றும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகஊடகங்களில் குழுக்களை உருவாக்கி, அதில் வரும் புகார்களின் மூலம் சம்மந்தப்பட்ட பெற்றோரிடம் நேரில் சென்று பேசுகிறார் இலியாஸ். பலர் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு ஏற்றுவிடுகின்றனர். சிலர் முரண்டு பிடித்தால் காவல்துறை மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் கொடுத்து திருமணத்தை நிறுத்துகிறார். இப்படி, இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை இலியாஸ் தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதனால், பலமுறை இவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்திருக்கிறார். 
 

கல்வி நிலையங்களின் பற்றாக்குறையும், குடும்பங்களின் பொருளாதார சூழலும் குழந்தைத் திருமணத்திற்குக் காரணமாகி, அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கி விடுகின்றன. குழந்தைத் திருமணம் முற்றிலும் ஒழிந்துபோகும் வரை எனது பயணம் ஓயாது என்கிறார் இலியாஸ்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

17 வயது சிறுமிக்கு திருமணம்; கணவர் கைது!

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

Married to a 17-year-old girl; Husband arrested!

 

சேலம் அருகே, 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக கணவர், மாமனார் ஆகியோரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

சேலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் மோகனா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி ரஞ்சித்குமார் என்ற இளைஞருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி மோகனா சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தன் கணவருடன் தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி மோகனா எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு முடித்திருந்த நிலையில், உறவினர் ரஞ்சித்குமாருக்கு இருதரப்பு பெற்றோர்களும் கூடிப்பேசி கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளதும், இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை என்பதும் தெரியவந்தது. 

 

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ரஞ்சித்குமார், அவருடைய தந்தை ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர், கணவரின் தாய் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருகின்றனர்.