Skip to main content

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்; “உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” - டெல்லி அமைச்சர்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Delhi Minister spoke about Bail for Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பாஜகவுக்குத் தெரியும். அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், இன்னொரு சதித்திட்டத்தை தீட்டி, ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நாளில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அவர் ஏன் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்? ஏனென்றால், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து, 10 மடங்கு வேகமாக டெல்லி மக்களுக்காகப் பணியாற்றுவார். இன்றைக்கு பிஜேபிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமும் உங்கள் சதி திட்டத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு நீதிமன்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி வருகிறது. பா.ஜ.க.வுக்கு மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வந்து மற்ற கட்சிகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்துங்கள். உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்