உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியைப் பொதுவெளியில் பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று கூறியுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களின் புகைப்படங்கள், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பேனர்கள் லக்னோ, ஹஸ்ரத்கஞ் பகுதிகளின் முக்கிய சாலைகளிலும், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தின் முன்பும் வைக்கப்பட்டன. இந்த பேனர்கள் யோகி ஆதித்யநாத்தின் அறிவுரையின் பேரிலேயே வைக்கப்பட்டதாக அம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் குறித்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது பேசிய நீதிபதிகள், இது அநியாயத்தை உச்சம் என்றும், தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்தனர். மேலும், உ.பி அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிமன்றம் உடனடியாக அந்த பேனர்களை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.