
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்தார் ஷியாம் குர்தி. கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவரை, போலீசார் கைது செய்து சார்லப்பள்ளி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதன்படி, கடந்த 11ஆம் தேதி சார்லப்பள்ளி சிறையிலிருந்து விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்திற்கு சர்தார் ஷியாம் குர்தி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, சர்தாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை அறிவித்தார். இந்த தீர்ப்பால் கோபமடைந்த சர்தார், நீதிபதியின் மீது ஒரு செருப்பை வீசியதாகக் கூறிப்படுகிறது. இந்த சம்பவத்தால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த வழக்கறிஞர்கள், குற்றவாளி சர்தாரை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர், சர்தாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.