Skip to main content

தொடர் அமளி; இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்றம் 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

Continuity Parliament reconvenes today

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

 

கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் காலை இரு அவைகளும் கூடியது. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில்  தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை  12 மணிக்குக் கூடியது. அப்போதும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைமை மாநிலங்களவையிலும் நீடித்ததால் நாள் முழுவதும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டன.

 

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக இன்று கூடுகிறது. இன்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரம் குறித்து உடனடியாக  விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இது குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்