Skip to main content

"மோடி அரசு பின்வாங்கும் வரை போராட்டம்" - மெகா பேரணியை அறிவித்த காங்கிரஸ்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

rahul gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விலை உயர்வு மற்றும் பண வீக்கத்துக்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணியை அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மோடியும் பணவீக்கமும் மக்களின் வாழ்க்கையில் சாபமாகிவிட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தையும், பட்ஜெட்டையும் அழித்துவிட்டது.
 

பாரதிய ஜனதா அரசால் உந்தப்படும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் இந்திய மக்கள் தாங்க முடியாத கொடுமையையும் சொல்லொணாத் துயரத்தையும் அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்ச ஊட்டச்சத்துக்கு கூட பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் அன்றாட உணவுப் பொருட்களையும் மற்ற நுகர்பொருட்களையும் வாங்குவதற்கும் உட்கொள்வதற்கும் சிரமப்படுகிறார்கள். இந்த தீர்க்கமுடியாத வலியையும் மற்றும் மக்களின் துன்பத்தையும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப மின்னணு ஊடகங்களின் ஒரு பிரிவின் ஆதரவுடன், மத ரீதியாக பிளவுபடுத்தும் பிரசங்கங்களை வழங்குவதும், திசை திருப்பும் அறிக்கைகளை வழங்குவதுமே மோடி அரசின் ஒரே தீர்வாக இருக்கிறது.

 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான விலைகள், அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பிற நுகர்வுப் பொருட்களின் விலையில் சுழல் விளைவைக் கொண்டுள்ளது. சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எல்லாமே படிப்படியாக சாமானியர்களின் கைக்கு எட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது. மோடி அரசு சாதாரண இந்தியரின் துயரங்கள் மற்றும் வேதனைகள் குறித்து அலட்சியமாக உள்ளது அல்லது மற்ற சந்தர்ப்பங்களில் கேலி செய்கிறது.

 

காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் டிசம்பர் 12 ஆம் தேதி 'மெஹங்காய் ஹடாவோ' பேரணியை நடத்துவதன் மூலம் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் மீது நாட்டின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இந்திய முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இந்த பேரணியில் உரையாற்றுவர். இது தற்போதுள்ள மோடி அரசுக்கு, அதன் கொள்ளையை நிறுத்திக்கொள்ளவும், விலைவாசியை குறைக்கவும் ஒரு தீர்க்கமான எச்சரிக்கையை கொடுக்கும். மோடி அரசு பின்வாங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.