Skip to main content

'அடிக்க பாய்ந்த பயணி'; விமான நிறுவனங்களுக்கு திடீர் உத்தரவிட்ட மத்திய அரசு

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
The central government has issued a sudden order to the airlines

டெல்லில் இருந்து கோவா சென்ற விமானம் தாமதமாக சென்ற நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் விமானத்தின் அருகேயே கூட்டமாக அமர்ந்து உணவு அருந்தியதோடு,  விமான ஓடுதள பாதையின் அருகே ரெஸ்ட் எடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை விமான சேவை நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது.

டெல்லில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது.

அந்த விமானத்தில் பணிபுரிந்த விமானிகள் மற்றும் சிப்பந்திகள் வெளியேற, புதிய விமானிகள் மற்றும் சிப்பந்திகள் பொறுப்பேற்றனர். அதனைத் தொடர்ந்து பனிமூட்டம் இருப்பதால் விமானம் புறப்பட இன்னும் சற்று காலதாமதமாகும் என விமானி அனுப்குமார் அறிவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆத்திரமடைந்த பயணி ஒருவர் அவரை ஓடி சென்று தாக்கினார்.

The central government has issued a sudden order to the airlines

இந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகியது. தாக்கிய நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. விமான சேவை தாமதமானதால் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ஓய்வு எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது விமானத்தின் புறப்படும் நேரம் தாமதமானால் அது குறித்து உடனடியாக விமான நிறுவனத்தின் இணையதளம், வாட்ஸ் அப், குறுஞ்செய்தி மூலம் பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை அனைத்து விமான நிறுவனங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்