உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயதான அந்த பெண், வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். அதன்பின் அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தந்தை இறப்பிற்கு சாட்சியமாக இருந்த நபரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தாய் மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த அப்பெண், திங்கள்கிழமை தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞர் ஆகியோருடன் ரேபரேலி நோக்கி காரில் சென்ற போது லாரி ஒன்று மோதியது. இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் விபத்து இல்லை, சதி என அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.