Skip to main content

62 மரங்களை வெட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனம்: சிறை தண்டனை இல்லை... ஆனால் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

CALCUTTA HIGH COURT

 

கொல்கத்தாவின் முக்கிய பகுதியான ரசல் தெருவில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, செவன் ஸ்டார் ஹோட்டல் கட்டுவதற்காக 62 மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்தது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மரங்களை வெட்டிய அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

 

அந்த மனுவில், தாங்கள் முதல்முறையாக இந்த தவறை செய்துள்ளதாக குறிப்பிட்டதோடு, 62 மரங்களை வெட்டியதற்கு இழப்பீடாக அதைவிட இரட்டிப்பான மரங்களை நடுவதாகவும், எனவே தங்களுக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டுமென்றும் அந்நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் மந்தா, மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கைக் கைவிட ரியல் எஸ்டேட் நிறுவனம் 15 நாட்களுக்குள் 40 கோடி அபராதம் செலுத்த வேண்டுமெனவும் 100 மரங்களை நட வேண்டுமென்றும் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

 

"மனுதாரர்களுக்கு (மரத்தை வெட்டியவர்களை) சிறை தண்டனை விதிப்பது, வெட்டப்பட்ட மரங்களைத் திரும்ப கொண்டுவராது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, மாநிலம் அல்லது வனத்துறை அல்லது சமூகத்திற்கு இழப்பீடு வழங்குவதே நியாயமான தண்டனையாக இருக்கும். இந்த இழப்பீட்டை பொதுவாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதற்கு எதிரான கண்காணிப்பை சிறப்பாக பராமரிப்பதற்கும் பயன்படுத்தலாம்" என நீதிபதி ராஜசேகர் மந்தா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும், 15 நாட்களுக்குள் 40 கோடியை செலுத்துவதோடு 100 மரங்களை நடாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

 

மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டினால், அம்மாநில சட்டப்படி நீதிமன்றம் 5,000 அபராதமோ, ஓராண்டு சிறை தண்டனையோ, அல்லது இரண்டுமோ விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெட்டப்பட்ட அளவிற்கான மரங்களை அதை வெட்டியவர் திரும்ப நட வேண்டும். அதுவரை தினமும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.