Skip to main content

“ஹத்ராஸில் நடந்தது விபத்து அல்ல; கொலை” - வெளியான பரபரப்பு தகவல் 

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Boleh Bala lawyer said that the masked gang was involved in Hathras incident

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றிய பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனிடையே, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  

இதனிடையே வீடியோ வாயிலாக பேசிய சாமியார் போலே பாலா, “இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த வலியைத் தாங்கும் சக்தியை கடவுள் எங்களுக்குத் தரட்டும். தயவுசெய்து அரசாங்கம் மற்றும் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். குழப்பத்தை உருவாக்கிய எவரும் தப்பிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் ஏ.பி. சிங் மூலம், கமிட்டியின் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் நின்று அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

இது குறித்து பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது விபத்தோ, சதி திட்டமோ எதுவாக இருந்தாலும் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டு இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சாமியார் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், “சாமியார் போலே பாலாவின் பேச்சைக் கேட்க நிறைய பேர் வந்திருந்தனர். அதில் முகங்களை மறைத்தப்படி முகமூடி அணிந்தப்படி கூட்டத்திற்குள் 15 முதல் 16 நபர்கள் வந்திருந்தாக, நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள். முகமூடி அணிந்த நபர்கள் கூட்டத்திற்கு வரும் போது கையில் விஷக்கேனை கொண்டு வந்து, பின்பு அதனைக் கூட்டத்தில் வைத்து திடீரென திறந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை பார்த்தேன். அவர்கள் யாரும் காயப்பட்டு உயிரிழக்கவில்லை; மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். அவர்களின் பணியை செய்துவிட்டு தப்பித்து செல்ல வசதியாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதனையும் சமர்ப்பிப்போம். இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்க வேண்டும். இது விபத்து அல்ல; கொலை” என்று தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்