Skip to main content

ஹரியானாவில் இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை!

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இளம்பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள இஷாபூர்கெரி கிராமத்தின் ஊராட்சித்தலைவராக பிரேம்சிங் இருந்துவருகிறார்.

 

Haryana

 

இவர் சமீபத்தில், இந்த கிராமத்தில் உள்ள இளம்பெண்கள் இன்டர்நெட் வசதியுள்ள செல்போன்களைப் பயன்படுத்தவும், ஜீன்ஸ் பேண்ட் அணியவும் உத்தரவிட்டார். பிரேம்சிங்கின் இந்த உத்தரவு அக்கம்பக்கத்து கிராமங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சொந்த கிராமத்தில் இளம்பெண்கள் மத்தியில் இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இந்தத்தடை உத்தரவு சில தினங்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்தது.

 

இந்த உத்தரவைப் பிறப்பித்த பிரேம்சிங் இதுகுறித்து, ‘இன்டர்நெட் வசதியுள்ள செல்போன்களைப் பயன்படுத்தும் இளம்பெண்கள், ஆண்களிடம் காதல் வயப்பட்டு அவர்களை காதல் திருமணம் செய்துகொள்கின்றனர். நாகரீகமான உடை அணியும் பெண்களால் ஆண்கள் கவரப்படுகின்றனர். இதனால், தேவையற்ற பிரச்சனைகள் உருவாகின்றன. மேலும், காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் இன்றுவரை வீடுதிரும்பவில்லை’ என விளக்கமளித்துள்ளார். மேலும், இன்டர்நெட் வசதியில்லாத செல்போன்களை இளம்பெண்கள் பயன்படுத்துவதில் எந்தவித பிரச்சனை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பா.ஜ.க.வில் இருந்து குடும்பத்துடன் விலகிய முன்னாள் ஒன்றிய அமைச்சர்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Former Union Minister who left BJP with his family in haryana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இதற்கிடையில், பா.ஜ.க கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், அக்கட்சியின் மீது அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவதும் என மாறி மாறி கட்சி மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இது பா.ஜ.க மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த பிரேந்தர் சிங், ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர், உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா, 2021 மீதான கூட்டுக் குழு மற்றும் மனுக்களுக்கான குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். 

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங், பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவுக்கு அனுப்பியுள்ளேன். 2014-19ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏவாக இருந்த எனது மனைவி பிரேம் லதாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாளை காங்கிரசில் இணைவோம்” என்று கூறினார். 

காங்கிரஸுடன், 40 ஆண்டுகால நீடித்த உறவுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரேந்தர் சிங் பா.ஜ.கவில் சேர்ந்தார். கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று பிரந்தர் சிங்கின் மகன் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.