Skip to main content

பழங்குடியின பெண்ணின் ஆடைகளைக் கலைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர குடும்பம்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Atrocities in Rajasthan; Police investigation

 

ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கர் மாவட்டம் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், அந்த பெண் வேறு ஒரு இளைஞரோடு தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி அந்த கிராமம் முழுக்க ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், அந்த பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை தெரிந்து கொண்ட கணவர் அந்த பெண்ணை கண்டித்துள்ளார். இதனால், அந்த பெண் இளைஞருடன் வேறு ஒரு கிராமத்திற்கு தப்பிக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றதாக காவல்துறையினருக்குத் தெரியவந்தது. மேலும், இது குறித்து கணவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிக்கப்படுவார்கள் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். மேலும், இந்த விவாகரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

இதுகுறித்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதாப்கர் மாவட்டத்தில், குடும்ப தகராறு காரணமாக ஒரு பெண்ணை நிர்வாணமாக்கும் வீடியோ பரவலானது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவியல் ஏ.டி.ஜி.பி.யை சம்பவ இடத்திற்கு அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை. இந்த குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்