Skip to main content

திரிணாமூலில் இணைந்தார் மேலும் ஒரு எம்.எல்.ஏ - காலியாகும் பாஜக கூடாரம்!

Published on 31/08/2021 | Edited on 04/09/2021

 

bjp mla joins tmc

 

மேற்குவங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இருப்பினும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

 

இதனையடுத்து சில பாஜக தலைவர்கள் திரிணாமூல் கட்சியில் இணைந்தனர். அதேபோல் திரிணாமூல் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற பலரும் மீண்டும் திரிணாமூல் கட்சிக்கு திரும்ப முயற்சித்தனர். அதேபோல் பாஜக எம்.எல்.ஏ-க்கள் பலரும் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்த சூழலில் திரிணாமூல் காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்தவரும், பின்னர் அதிலிருந்து விலகி 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, இந்தாண்டு நடைபெற்றச் சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ ஆனவருமான முகுல் ராய், கடந்த ஜூன் மாதம் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.

 

அதன்பிறகு நேற்று, இந்தாண்டு நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏவான தன்மோய் கோஷ் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸிற்கே திரும்பினார்.

 

இந்தநிலையில் தற்போது மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏவான பிஸ்வஜித் தாஸ் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருடன் பாஜக கவுன்சிலர் ஒருவரும் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

 

இதற்கிடையே மேலும் சில எம்.எல்.ஏ பாஜகவில் இருந்து விலக தயாராகி வருவதாகவும், தினாஜ்பூர் எம்.எல்.ஏ திரிணாமூல் காங்கிரஸில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் கட்சியை விட்டு விலகுவது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்