Skip to main content

ஏர்டெல் கட்டணம் 57% கிடுகிடு உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published on 21/11/2022 | Edited on 22/11/2022

 

h

 

ஏர்டெல் நிறுவனம், அடிப்படை சேவைக் கட்டணத்தை, 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக,  57% உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த கட்டண  உயர்வை, இந்தியாவிலுள்ள ஹரியானா, ஒடிஷா மாநிலங்களில் தற்போது அமல்ப்படுத்தியுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழும் விமர்சனங்களைப் பொறுத்து, அடுத்தகட்டமாக இந்தியா முழுவதும் கொண்டுவரவுள்ளது. தற்போதுள்ள பொருளாதாரச் சரிவு நிலையில், இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளது.

 

டிஜிட்டல் இந்தியா உருவாக்கத்தில் ஒன்றிய அரசு காட்டிவரும் அபரிமித ஆர்வத்தால், ஸ்மார்ட் போன் பயன்பாடு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை போன்றவை வெகுவேகமாகப் புழக்கத்துக்கு வருகிறது. 2016ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ சந்தைக்குள் அதிரடியாக வந்து, அன்லிமிடேட் டேட்டா பயன்பாட்டை வழங்கி, மற்ற செல்பேசி நிறுவனங்களுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாரதப் பிரதமர் மோடியே ரிலையன்ஸ் ஜியோவிற்கு விளம்பர மாடல் போல போஸ் கொடுத்தது அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

 

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் ஏர்டெல் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.  வோடஃபோன், ஐடியா நிறுவனங்களும் ஆட்டம் கண்டு, தாக்குப்பிடிப்பதற்காக  இரண்டும் ஒன்றாக இணைந்தன. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சிதைக்கப்பட்டது. ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் பெருத்த நட்டத்தைச் சந்தித்து, கடனில்  தத்தளித்தன. இதிலிருந்து மீள்வதற்காக அவ்வப்போது, பல்வேறு விதங்களில் கட்டணங்களை உயர்த்திவந்தன. இதற்கிடையே கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் கரோனாவினால் ஏற்பட்ட பொதுமுடக்கம், ஆன்லைன் கல்வியைப் பெருமளவு பரவலாக்கியது. இதன் காரணமாக, அனைத்து மாணவர்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். எனவே செல்பேசி சேவைக்கான தேவை அதிகரித்தது. இது செல்பேசி  நிறுவனங்களுக்கு ஜாக்பாட் போல அமைந்தது. இந்தியாவில் கடந்த 2021 கணக்கீட்டின்படி, 12 கோடி பேர் செல்பேசிப் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். 

 

இவர்களின் 7.5 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 10 கோடி ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களாக அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக, செல்பேசி நிறுவனங்கள் மீண்டும் சிக்கலைச் சந்திக்கின்றன. எனவே இதைச் சமாளிப்பதற்காக, குறைந்தது 20% அளவிற்கு கட்டண உயர்வு இருக்குமென எதிர்பார்த்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக 57% கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிவிக்கவுள்ளன. ஸ்மார்ட்போன்களுக்குப்  பழக்கப்பட்டுப்போன மக்கள் இதிலிருந்து தப்புவது கடினமே! 

 

- தெ.சு.கவுதமன்


 

சார்ந்த செய்திகள்