தெலங்கானா மாநிலத்தில் பொனகல் என்ற கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஸ்ரீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில், மாணவர்கள் அனைவரும் இவரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஸ்ரீனிவாசனும் மாணவர்களின் நலன் சார்ந்த விஷங்களில் அதீத கவனம் எடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். மேலும் அவர் படிப்பைத் தாண்டி மற்ற விஷங்களிலும் மாணவர்களுக்கு உதவியிருக்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி ஆசிரியர் ஸ்ரீனிவாசன் அக்காபெல்லிகுடா என்ற கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவர்கள் கதறி அழுது, ‘வேறு பள்ளிக்கு எல்லாம் செல்ல வேண்டாம் சார்..’ என்று வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் அக்காபெல்லிகுடா பள்ளிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் தங்களுக்கு விருப்பமான ஆசிரியர் வேலை பார்க்கும் பள்ளியில் தான் படிப்போன் என்று பொனகல் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் இருந்து அக்காபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் 133 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
பொனகல் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் 250 மாணவர்களில் பாதி மாணவர்கள் ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் பெற்ற பள்ளியில் சேர்ந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. “இது பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் காட்டுகிறது. ஒவ்வொரு மாணவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றார்போல் பாடத்தை நடத்துகிறேனே தவிர வேறெதையும் நான் செய்யவில்லை” என்று கூறிய ஆசிரியர் ஸ்ரீனிவாசன், அனைத்து அரசு பள்ளிகளும் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது; அதனைப் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளார்.