Skip to main content

சிவசங்கர் பாபா கைது...

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Sivasankar Baba areested by tamil nadu CBCID  police in delhi

 

டெல்லியில் சிவசங்கர் பாபா தமிழக சிபிசிஐடி போலீசாரால் வளைக்கப்பட்டார். இன்று (16.06.2021) மாலை அல்லது நாளை அவரை சென்னை அழைத்து வர உள்ளனர். சென்னைக்கு அழைத்துவந்த பின்னர் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

 

இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. 

 

இந்நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சான்றுகளையும் புகைப்படங்களையும் அவரது தரப்பினர் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து, டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி குழு விரைந்தது. மேலும், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே டேராடூனில் இருந்து சிவசங்கர் பாபா தப்பித்து சென்றுள்ளார்.

 

இந்தநிலையில்தான் டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் வளைத்ததாகவும், இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வர உள்ளதாகவும், சென்னையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்