Skip to main content

பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது: மு.க.ஸ்டாலின்

Published on 06/03/2018 | Edited on 06/03/2018
stalin


பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது என திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

செய்தியாளர்: திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ஸ்டாலின்: தந்தை பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

செய்தியாளர்: ஒரு புதிய கூட்டணி அமைக்கும் திட்டத்துடன் உங்களை தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி அவர்களுக்கு திமுக தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது? புதிய கூட்டணி இப்போது தேவையா?

ஸ்டாலின்: நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அப்போது எங்களுடைய உயர்மட்ட குழுவுடன் விவாதித்து, பதில் சொல்வதாக தெரிவித்து இருக்கிறேன்.

செய்தியாளர்: மூன்றாவது அணி அமைப்பது இப்போது தேவையா?

ஸ்டாலின்: திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், உயர்மட்ட குழுவிடம் விவாதித்து பதிலளிப்போம்.

செய்தியாளர்: தமிழகத்தில் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நான் போக்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்: தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழ்நாட்டு மக்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும், அடுத்த ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் அமையப்போகிறது. மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

செய்தியாளர்: காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என நீங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்த நிலையில், 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை மத்திய அரசு அழைத்திருக்கிறதே?

ஸ்டாலின்:  நேற்று மாலை தமிழத்தின் துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு, “வரும் 8 ஆம் தேதியன்று சட்டமன்றத்தை கூட்டுவதாக நாங்கள் உங்களிடத்தில் சொல்லியிருந்தோம். ஆனால், திடீரென, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக, நான்கு மாநிலத்தின் அதிகாரிகளை டெல்லியில் இருந்து அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அந்தக் கூட்டம் 9 ஆம் தேதி முடிந்த பிறகு சட்டமன்றத்தை கூட்டலாமா?”, என்று கேட்டார். அவருக்கு பதிலளித்தபோது, “உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட 6 வாரகாலத்தில் ஏற்கனவே 3 வாரங்கள் முடிந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதற்காக, ஏமாற்றுவதற்காக செய்யப்படும் நாடகம் இது”, என்று நான் தெளிவாக குறிப்பிட்டேன். ஆனால் அவர், “இல்லை. 9 ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகு, அதை பார்த்து விட்டு சட்டமன்றத்தை கூட்டலாம்”, என்று தெரிவித்தார். அதனால் நான் ஏற்றுக் கொண்டேன்.

செய்தியாளர்: நான்கு மாநில பிரச்னையான காவேரி விவகாரத்தில், பிரதமர் கர்நாடகத்தில் பேசும்போது மட்டும் டாப் பிரையாரிட்டி என்று சொல்கிறார், ஆனால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கவே மறுக்கிறாரே?

ஸ்டாலின்:  அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று திமுக தரப்பில் நாங்கள் தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது. எனவே, அந்தத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுள்ள பிரதமர் தமிழ்நாட்டு மக்களின் நிலை பற்றி கவலைப்படவில்லை. நேற்று நான் தொலைபேசியில் பேசும்போதுகூட, “நிச்சயமாக அவர் நம்முடன் பேசுவதற்கு அழைக்கப்போவதில்லை”, என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதனால் தான், முதலமைச்சரை நேரடியாக சந்தித்தபோது, “சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்ற, ராஜ்யசபையின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று எச்சரிக்கை தெரிவியுங்கள்”, என்று வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.