Skip to main content

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அசராம் பாபு குற்றவாளி!

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

Asaram

 

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஆசிரமங்கள், பணபலம், அரசியல் செல்வாக்கு என எல்லாமும் கொண்டவர் சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபு. ஜோத்பூரில் உள்ள இவரது ஆசிரமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் படிப்பதற்காக சேர்த்துவிட்டனர். அங்கு படித்துக்கொண்டிருந்த சிறுமிக்கு தீய சக்திகளின் அச்சுறுத்தல் உள்ளது, பேய் ஓட்டவேண்டும் எனக்கூறி பூஜை நடத்திய அசராம் பாபு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை நடத்தப்பட்டு காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியங்கள் 9 பேர் வழக்கு நடந்த சமயத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். மூன்றுபேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டு, அதை மறுத்த நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்திருக்கிறார். இத்தனை அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், சிறுமி தொடர்ந்து விசாரணையில் கலந்துகொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம் என்பதால் ஹரியானா, குஜராத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ஜோத்பூர் நீதிமன்றம் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அசராம் பாபுவை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அசராம் பாபு தரப்பு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் சீடருக்கு பாலியல் தொந்தரவு! - சர்ச்சையில் சிக்கிய இன்னொரு சாமியார்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

என்னதான் பொதுசமூகத்தில் ஆன்மீகம் பொங்கினாலும், பெண்கள் விஷயத்தில் அத்துமீறி அதுதொடர்பான வழக்குகளில் சிக்குவதில் எந்த சாமியார்களும் சளைத்தவர்களில்லை. அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தற்போது அந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 
 

Daati

 

 

 

டெல்லியில் உள்ள ஸ்ரீ ஷனிதாம் அறக்கட்டளையை நடத்திவருகிறார் சர்ச்சைக்குரிய சாமியார் தாட்டி மகராஜ். இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் (தற்போது வயது 25) சீடராக சேர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக சாமியார் தாட்டி மகராஜ், பெண் சீடரை தனியறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அங்குள்ள இரு ஆண் சீடர்களும் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியுள்ளனர். இதற்கு அங்கிருந்து பெண் சீடர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
 

இதனால், மனமுடைந்த பெண் சீடர் அங்கிருந்து சொந்த ஊருக்கு தப்பியோடி, மன அழுத்தத்துடன் வாழ்ந்துவந்துள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி வருந்திய அந்த பெண், தற்போது டெல்லி மெஹ்ரூலியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மலிவால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

 

Next Story

தீர்ப்பைக் கேட்டதும் நிம்மதி இழந்து, பயந்துபோன ஆசாராம் பாபு! 

Published on 26/04/2018 | Edited on 26/04/2018
Asaram

16 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜோத்பூர் எஸ்.இ/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவைக் குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உதவியாக இருந்த ஹிப்ளி மற்றும் சரத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 

இந்நிலையில், தீர்ப்பளிக்கப்பட்ட அந்த தருணத்தில் ஆசாராம் பாபு எந்த நிலையில் இருந்தார் என ஜெயில் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘நீதிபதி மதுசூதனன் சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என அறிவித்து, தண்டனை விவரத்தை பிறகு அறிவிக்கலாம் எனக் கூறிய நிலையில், தனது வழக்கறிஞர்களை ‘ஏதாவது செய்யுங்கள்’ என கேட்டுக்கொண்டே இருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த நேரமும் அவர் நிம்மதியற்ற நிலையிலேயே இருந்தார். நீதிபதி தன்னை குற்றவாளி என அறிவித்தபோது அவர் நொறுங்கிப் போயிருந்தார். மேல் கோர்ட்டில் இந்த வழக்குகளை எதிர்கொள்வேன் என சவால் செய்துவிட்டு, தனது அறையில் எதையோ நினைத்துக்கொண்டு சோகமாக அங்குமிங்கும் நடந்துகொண்டே இருந்தார்’ என தெரிவித்துள்ளார்.

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறது. கூடிய விரைவில் அதை காந்திநகர் நீதிமன்றம் வழங்கயிருக்கிறது. சாமான்யர்களுக்கும் சட்டம் கைகொடுக்கும் என்பதை ஜோத்பூர் வழக்கு நேற்று நிரூபித்தது. அதேபோல், சூரத் சிறுமிகள் வழக்கும் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.