Skip to main content

”குற்றப்பரம்பரை சட்டத்தில் இந்த இரண்டு சாதிகளும் இருந்தன” - பின்னணி விளக்கும் ரத்னகுமார் 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

writer rathnakumar

 

 

"வேப்பூர் பறையர்கள் ஏன் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள்? திருச்சி துறையூருக்கு அருகே வேப்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளனர். பெரும்பாலும் காவல் காக்கும் வேலையை அவர்கள் செய்துவந்துள்ளார்கள். போர்க்காலத்தில் படையில் சேர்ந்து சண்டை செய்வார்கள். போர் இல்லாத சமயத்தில் அந்த ஊர் பகுதியில் காவல் காத்து அங்குள்ள மக்களிடம் பணம் வாங்கிக்கொள்வார்கள். அந்தப் பகுதியெல்லாம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலிருந்தது. அவர்கள் வெள்ளைக்காரனை எதிர்த்துத்தான் சண்டை போட்டிருக்கிறார்கள். பிரெஞ்சின் தலைமையாக இருந்த துறையூர் ரெட்டியார் படையில் கூட பறையர் சமூக மக்கள் இருந்துள்ளார்கள். இது கி.பி 1758 காலகட்டத்தையொட்டி நடந்தது. 

 

குற்றப்பரம்பரைச் சட்டம் கி.பி 1856-ல் கொண்டுவரப்படுகிறது. வரலாற்றில் யார் யாரெல்லாம் நமக்கு எதிரிகளாக இருந்துள்ளார்கள் என்று பார்த்த வெள்ளைக்காரன், அவர்கள் அனைவரையும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கிறான். பூலித்தேவன், வேலுநாச்சியார் எந்தச் சமூகம் என்று பார்த்து அந்தச் சமூக மக்களை அந்தச் சட்டத்தில் சேர்க்கிறான். வீரபாண்டிய கட்டபொம்மன் எந்தச் சமூகம் என்று பார்த்து அந்தச் சமூக மக்களையும் அந்தப் பட்டியலில் சேர்க்கிறான். காவல் தொழில் செய்து போர்க் காலத்தில் பிரெஞ்சு படையில் இணைந்து பிரிட்டிஷை எதிர்த்து சண்டை செய்ததால் வேப்பூர் பறையர் மக்களும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.

 

குற்றப்பரம்பரை சட்டத்தில் 89 சாதிகளின் இருந்தன. அந்த 89 சாதிகளில் ஒன்றாக வேப்பூர் பறையர் சாதியும் உள்ளது. தமிழகத்தின் வேறு எந்தப் பகுதியிலிருந்த பறையர் சமூக மக்களும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இதேமுறையில்தான் சில இடங்களிலிருந்த வன்னியர்களும் குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்".

 

 

Next Story

5 ரூபாய்க்கு வேலைக்கு வந்தவர் ஆற்காட்டை கைப்பற்றியது எப்படி? - சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை விளக்கும் ரத்னகுமார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ராபர்ட் க்ளைவ் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் ராபர்ட் க்ளைவின் மிகப்பெரிய ரசிகன். அலெக்சாண்டர், நெப்போலியன் போல ராபர்ட் க்ளைவும் வரலாற்று நாயகன். அடிதடி, வெட்டுக்குத்து எதற்கும் அஞ்சாதவன் ராபர்ட் க்ளைவ். ஹைதர் அலி வேகமாக முன்னேறுவதில் வல்லவர். மருதநாயகம் வியூகம் வகுப்பதில் வல்லவர். இந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவர் ராபர்ட் க்ளைவ். வெறும் 500 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஆற்காட்டைப் பிடித்துக்காட்டியவர். 

 

இந்தியா பற்றிய அறிவை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று  ராபர்ட் க்ளைவ் பதிவு செய்துள்ளார். அவர் இந்தியாவிற்கு வந்தபோது அவருடைய வயது 19. கிளர்க் வேலைக்காக வந்தவருக்கு 5 ரூபாய் சம்பளம். பின், சில காலம் குடோனில் கணக்குவழக்கு எழுதியுள்ளார். அதன் பிறகு ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில் புத்தகத்தைத் துடைத்து வைக்கும் வேலை பார்த்திருக்கிறார். 

 

அந்த நூலகத்தில் வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகம்தான் இருக்கும். கடுக்காய் மையைப் பயன்படுத்தித்தான்  வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அதை விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை படித்துத்தான் இந்தியர்களை அடையாளம் கண்டதாக  ராபர்ட் க்ளைவ் பதிவுசெய்துள்ளார். வெறும் கிளர்க்காக பணியில் சேர்ந்த  ராபர்ட் க்ளைவ், ஆறு வருடங்களிலேயே லாரன்ஸ் ஸ்டிங்கர் மூலமாக ஆர்மி கேப்டனாகிவிடுகிறார்.  

 

திருச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி சண்டை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்குப் பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரெஞ்சு படைகள் சந்தா சாஹேப்பிற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் பிரெஞ்சு படைகளை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் படைகள் சற்று பலவீனமாக இருந்தன. இந்த திருச்சி முற்றுகையில் சந்தா சாஹேப் தோல்வியடைகிறார். அதற்கு முக்கிய காரணம் ராபர்ட் க்ளைவ் வகுத்த நேர்த்தியான போர் வியூகம்தான். 

 

இந்தச் சண்டையின்போது பிரெஞ்சு படைகள் வலுவுடன் இருந்ததால் சந்தா சாஹேப்பை தாக்க வேண்டுமா என்று பிரிட்டிஷுக்கு யோசனை இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்தான், சந்தா சாஹேப்பை வீழ்த்த இங்குதான் அடிக்க வேண்டும் என்றில்லை; ஆற்காட்டிலும் அடிக்கலாம் என்று யோசனை கூறுகிறார். ஆற்காட்டுக் கோட்டையில் சந்தா சாஹேப்பின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்வுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை. நான் செய்துகாட்டுகிறேன், எனக்கு ஒருநாள் அவகாசமும் 500 பேரும் கொடுங்கள் என ராபர்ட் க்ளைவ் கேட்டுள்ளார். தான் சொன்னது போலவே 500 பேரோடு சென்று ஒரு குண்டைக்கூட வெடிக்கச் செய்யாமல் ஆற்காட்டைக் கைப்பற்றிக்காட்டினார் ராபர்ட் க்ளைவ்”.     

 

Next Story

”’கருங்காலிப் பயலே’னு திட்டுறோமே, அதன் அர்த்தம் தெரியுமா?” - உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ரத்னகுமார்

Published on 16/06/2022 | Edited on 22/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கருங்காலி என்ற சொல்லுக்கான பெயர்க்காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"தோகத்தி மரத்தைத்தான் கருங்காலி மரம் என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் தோகத்தி கருமை நிறத்தில் இருக்கும். அந்த மரத்தை அரிவாள் கொண்டு வெட்டவே முடியாது. கருங்காலி மரக்கட்டை கோடாலி, ஈட்டி, வேல் கம்பு செய்வதற்குப் பயன்படும். அந்தக் கட்டையை பாறையில் அடித்தால்கூட உடையாது, தெறிக்காது. 

 

கருங்காலிப் பயலே என்று சிலர் திட்டி கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்? தற்போது கருங்காலி மரம் வெட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலத்தில் கருங்காலியை வெட்ட வேண்டுமென்றால் கோடாரியைத்தான் பயன்படுத்துவார்கள். கோடாரி வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் கருங்காலி கட்டையில்தான் அதன் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும். கருங்காலி கட்டையில் செய்யப்பட்ட கோடாரி கருங்காலி மரத்தை வெட்டவே பயன்படுவதால், தன்னுடைய இனத்தை காட்டிக்கொடுப்பவனை குறிப்பிட கருங்காலி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி என்பதற்கான பெயர்க்காரணம் இதுதான்".