Skip to main content

எட்டு நாட்களாகியும் எடப்பாடி எட்டிப்பார்க்காத மர்மம் என்ன?

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு கரையேறிய கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் சூறையாடிவிட்டு சென்றது. இந்தத் தாக்குதலில் பல கரையோர கிராமங்கள் காணாமல்போன நிலைக்கு துடைத்தெறியப்பட்டன.

 

cc

 

 

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட ஏழை நடுத்தர மக்களின் எளிய வீடுகள் நாசமாகின. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் அவலம் நேர்ந்தது.

 

 

ஆனால், புயல் ஓய்ந்த மறுநாளே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அருகில் ஓடி நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்ல வேண்டிய அரசு நிவாரண உதவிகளை தயார்படுத்தவே இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

 

 

புயல் வரப்போகிறது, புரட்டிப்போடப் போகிறது என்று இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்து வந்த நிலையில், மக்களுடைய உயிரைத்தான் பாதுகாக்க முடியும், வீடுகளையோ, விவசாயத்தையோ பாதுகாக்க முடியாது என்பதும் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

 

 

cc

 

 

மக்களுடைய அத்தியாவசிய தேவைக்கான, உடனடியாக தேவைப்படும் பொருட்களை மறுநாளே வினியோகிக்க முன்னேற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டாமா?

 

 

மாநிலத்தின் உணவுக்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஏற்படப்போகும் பேரழிவை உணர்ந்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாமனார் ஊருக்குப் போய் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அரசுவிழாவில் ஆடம்பர வரவேற்பை ஏற்கவும் நான்கு நாட்களை செலவு செய்கிறார் என்றால் அவருடைய மனநிலையை நாம் எப்படி புரிந்துகொள்வது?

 

 

ஐந்து நாட்கள் கழித்து மக்கள் ஆத்திரம் வெடித்தவுடன், எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் விமர்சனம் செய்தவுடன் ஹெலிகாப்டரில் பறந்து சேதத்தை பார்வையிடப் போவதாக அறிவிக்கிறார். மறுநாள் பறந்து பார்த்திருந்தாலும் பரவாயில்லை. ஐந்து நாட்களாக போக்குவரத்துக்கு வழியில்லாமல், நிவாரண உதவிகளே கிடைக்காமல் மக்கள் தவித்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் மக்களை சந்திக்கிற நிலையில் முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்தால், மக்களை என்ன நினைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கேட்கத்தானே செய்வார்கள்.

 

 

புதுக்கோட்டையில் செட்டப் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் வேறு பகுதிகளுக்கு செல்லக்கூட முடியவில்லை என்பது எவ்வளவுபெரிய அவமானம். இதை மறைத்துவிட்டு பிரதமரை போய் பார்க்கப் போகிறார்.

 

 

நியாயமாக முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? கோட்டையில் இருந்து நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் வினியோகிக்க உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு இடத்தில் முகாமிட்டு அங்கிருந்து அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை வழியே பயணம் செய்யப் போவதாக அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவித்திருந்தால் முதல்வர் பயணம் செய்யப்போகும் சாலைகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருக்கும். இதுதான் சுயமாய் சிந்தித்து செயல்படும் முதல்வர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

 

 

சென்னையில் வர்தா புயல் பாதிப்பில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டபோது எவ்வளவு விரைவாக போக்குவரத்து சீராக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கிராமப்புற சாலைகளை அனைத்தும் நிவாரண உதவிகள் செல்லக்கூட வழியில்லாமல் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், கிராம மக்கள்தானே, அவர்கள் எப்படியும் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்டி பாதைகளை சரிசெய்துவிடுவார்கள் என்று அரசு இருந்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

 

 

புயல் தாக்கியவுடன் மறுநாளே மத்திய அரசைத் தொடர்புகொண்டு ராணுவ ஹெலிகாப்டர்களை உதவிக்கு அழைத்திருக்கலாம். ராணுவத்தின் உதவியைக் கூட கேட்டிருக்கலாம். ஓபிஎஸ்சின் தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் கிடைக்கும்போது, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் கிடைக்காதா?

 

 

c

 

 

காமராஜரோ, கலைஞரோ, ஸ்டாலினோ எந்த தயக்கமும் இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நிற்க முடியும்போது, எடப்பாடியால் ஏன் அது முடியவில்லை. அவரும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்தானே. மக்களை மதிக்கிற மகாராஜாக்கள்தான் மக்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடியும் டீக்கடை வைத்திருந்த மோடியும் மகாராஜாக்களைப் போல மக்களை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

 

 

பொதுவாகவே டெல்டா மாவட்டங்களை மொத்தமாக பாலைவனமாக்கி அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், வேதாந்தாக்களுக்கும் தாரை வார்ப்பதில்தான் பாஜக அரசு மிகவும் குறியாக இருக்கிறது. அந்த நோக்கத்தில்தான் காவிரி விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையாக நடந்துகொண்டது. ஆனால், இயற்கை அன்னையின் கருணையில் காவிரி பொங்கிவடியும் அளவுக்கு மழை பெய்துவிட்டது. இப்போது, விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யுமளவுக்கு புயல் புரட்டிப் போட்டிருக்கிறது.

 

 

டெல்டா பகுதி நாசமாகி, மக்கள் பாதிக்கப்படுவதை கார்பரேட் முதலாளிகளின் அரசுகளாக தமிழக அரசும், மத்திய அரசும் எட்டாவது நாளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
 

 

 

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.