Skip to main content

தேர்தல் முடிவு எந்த அதிகாரிக்கு சாதகம்?

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

தேர்தல் முடிவு யாருக்கு சாதகமா இருக்கும்ன்னு கோட்டையில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெட்டிங் நடந்தது பற்றி நாம பேசியிருக்கோம். அந்த பெட்டிங் இப்ப வேகமானதால, வாக்கு எண்ணப்படும் நாள் வரை ரிசல்ட்டுக்குக் காத்திருக்க முடியாத அதிகாரிகள் பலரும், பல இடங்களிலும் தொடர்புகொண்டு  ரிசல்ட் எப்படி வரும்ன்னு விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ள அதிகாரிகள் தான் ஏழெட்டு வருசமா கோட்டையில் செல்வாக்கோடு இருக்காங்க. ரிசல்ட் விஷயத்தில் அவங்க கவலையா இருக்காங் களாம். கடந்த சில வருசங்களா ஓரங்கட்டப்பட்டிருக்கும் அதி காரிகளோ, ஆட்சி மாற்றம் பற்றிய எதிர்பார்ப்போடு சந்தோசமா இருக்காங்களாம். இதுதான் பெட்டிங் நிலவரம்.

 

election result



எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து வருமானவரித்துறை நிறைய ரெய்டு நடத்தியது. தமிழ்நாட்டில் அதிகம். மற்ற மாநிலங்களிலும் குறி வைக்கப்பட்டது. இந்த ரெய்டுகளைத் தலைமை ஏற்று நடத்தியவர் வருமானவரித்துறையோட தலைமைப் புலனாய்வு அதிகாரியான முரளிகுமாராம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும் மற்ற மாநிலங்களிலும் ரெய்டு நின்னுடிச்சி... தேர்தல் ரிசல்ட் வந்ததும், தேர்தல் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லா, பழைய இடத்துக்கே  மாற்றப்பட்டு விடுவாரு. அதே நேரம் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யான டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலமும் முடியப்போகுதே?

புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட இருப்பவர், இன்னும் ஒரு வருட காலமாவது பதவியில் இருக்கக் கூடியவராக இருக்கணும்ங்கிறது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு. அந்த வகையில் பார்த்தால், திரிபாதி, லஷ்மி பிரசாத், எம்.கே.ஜா, ஜாபர்சேட், தமிழ்ச்செல்வன், கரன்சின்ஹா,  விஜயகுமார், பிரதீப் பிலிப் ஆகியோரின் பதவிக் காலம் ஒரு வருட காலத்துக்கு மேல் இருக்கிறது. இவர்களில் ஜாபர்சேட் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானவர் என்பதால், அவரைத் தவிர்த்துவிட்டு மற்றவர்களின் பெயர்கள் டெல்லிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்ன்னு சொல்லப்படுது. அதேநேரம் இந்தப் பதவி சம்பந்தமா ஜாபர்சேட், டெல்லியில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்காராம்.

"நானும் அதிகாரி தரப்புத் தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் நில சீர்திருத்தத் துறை ஆணையராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜக் மோகன் ராஜு,  2009 முதல் 2014 வரை, மத்திய அரசுப் பணியில் இருந்தவர். அந்தக் காலகட்டத்தில்  தனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வை 4 அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்மையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு அதிரடிப் புகாரைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கார்.