Skip to main content

மக்களின் பசியைத் தீர்க்குமா மோடியின் 20 இலட்சம் கோடி திட்டம்? வெளிவந்த உண்மை நிலவரம்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

bjp


ஊரடங்கில் வேலை இல்லை- வருமானம் இல்லை என்றாலும் எல்லாருக்கும் பசிக்கிறது. ஆனால், அனைத்துத் தொழில்களும் முடங்கிக் கிடக்கின்றன. நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி, கடந்த 12 ஆம் தேதி இரவு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. தனது நீண்ட உரை முழுவதும், ‘ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' என்ற திட்டத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்த பிரதமர் மோடி, தொழில்துறையை மேம்படுத்தி, தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளின் சிரமத்தைப் போக்குவதற்காக ரூ.20 லட் சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்புகள் அடங்கியது இந்தத் திட்டம் என அறிவித்தார்.
 


13 ஆம் தேதி மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஆத்ம நிர் பார் பாரத் அபியான்' என பிரதமர் மோடி இந்தியில் அறிவித்ததை 'தற்சார்பு பாரதம்' என ஆங்கிலத்தில் தெரிவித்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தேவை, மனிதவளம், தொழில்நுட்பம் ஆகிய நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான ஐந்து தூண்களை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், 2020இல் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறோம். இந்திய வர்த்தக சின்னங்களை உலகளவில் கொண்டு செல்வது. தன்னிறைவு பெறுவதோடு, உலகிற்கு உதவுவது என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படும் என்று விரிவாகப் பேசியவர், இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களையும் விளக்கினார்.

கேட்டதும் கிடைத்ததும் 

ஊரடங்கு தொடங்கிய சமயத்தில், மத்திய அரசு அறிவித்த 1.70 லட்சம் கோடி நிவாரண உதவியில், சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான எந்தவித சலுகையும் இடம் பெறவில்லை. அதைப் பூர்த்தி செய்யும்விதமாக, சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பிணையில்லாமல் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வருகிற அக்டோபர் மாத இறுதிவரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும் என்பதால், 45 லட்சம் தொழில் நிறுவனங்கள் இதன்மூலம் பலன்பெறலாம். மேலும், நலிவடைந்த வாராக்கடன் பட்டியலில் இருக்கும் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக, ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும். இனி ரூ.200 கோடி வரையிலான அரசு கொள்முதல் டெண்டர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பில், சிறு-குறு மட்டும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகளை மாற்றியமைத்திருக்கும் முடிவைத் தொழில் முனைவோர் வரவேற்கிறார்கள். அதேசமயம், இந்தக் கோரிக்கைகள் நீண்ட காலமாக முன் வைக்கப்படுவதுதான். அதை ஊரடங்கு நிவாரணத்தோடு சேர்க்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் எழுந்தது. சிறு-குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கடனுக்கான வட்டி விகிதத்தை 6 சதவீதமாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டு கொள்ளாதது ஏமாற்றத்தையே தருவதாகச் சொல்கிறார்கள். 

கடனோ கடன்

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் மற்றும் குறுங்கடன் நிறுவனங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, ரூ.30 ஆயிரம் கோடிக்கு புதிய திட்டம் வகுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். மேலும், இந்த நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கான பகுதியளவு உத்தரவாதத்தை அரசு வழங்கும். இதற்காக ரூ.45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்படும். அரசுத்துறை ஒப்பந்ததாரர்கள், கூடுதலாக 6 மாதகால அவகாசம் எடுத்து பணியை முடிக்கலாம்.

டி.டி.எஸ். மற்றும் டி.சி.எஸ். ஆகிய வரிப்பிடித்தங்கள் தற்போதிருக்கும் அளவை விட, 25 சதவீதம் குறைக்கப்படும். இதனால், ரூ.50 ஆயிரம் வரை பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும். மேலும், பி.எஃப். வரி விகிதத்தை அடுத்த மூன்று மாதங் களுக்கு அரசே செலுத்தும். அத்துடன், 12 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அடுத்த மூன்று மாதங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியரின் கணக்கில் கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறும்’’ எனத் தனது அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஊரடங்கின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரே கடன் சலுகை, தவணைகளை அறிவித்தும், அதனை வங்கிக் கிளைகள் கடைப்பிடிக்காத நிலையில், சிறு-குறு நிறுவனங்களுக்குச் சொத்து அடமானம் இல்லாத கடன் மற்றும் சலுகைகள் எப்படி நிறைவேறும் என்று கேட்கிறார்கள் தொழில் துறையினர்.

50 நாள் கழித்து ஞானோதயம் 

நிர்மலாவின் அறிவிப்பில் நேரடியாகப் பசி தீர்க்கும் திட்டங்கள் இல்லை என்பதையும் குறிப்பாகப் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதும், வழியில் செத்து மடிவதுமாக உள்ள நிலையில் அதுபற்றி மோடி அரசுக்கு அக்கறை இல்லை என்பதை ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கடுமையாகச் சாட, அடுத்தநாள் இன்னொரு பேக்கேஜூடன் மீடியாவைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.
 

 


புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோரங்களில் கடை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், சிறு விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான ரூ.3.16 லட்சம் கோடி மதிப்பிலான 9 அம்ச திட்டங்களை அறிவித்தார். “நாடு லாக்டவுனில் இருந்தாலும், அரசாங்கம் ஒன்றும் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. மக்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது" என காரசாரமாக தனது பேச்சைத் தொடங்கினார். பட்டினியால் மக்கள் செத்துவிழும் நிலையில், 50 நாட்கள் கழித்து மோடி அரசுக்குத் திடீர் ஞானோதயம் வந்தது போல இருந்தது.

கிசான் (விவசாய) கடன் அட்டை மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்கான, ரூ.2 லட்சம் கோடி கடனில் விவசாயிகளோடு மீனவர்கள், கால்நடை வளர்ப்பில் தொடர்புடையவர்களும் பயனடைவார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.3,500 கோடி செலவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாதம் ஐந்து கிலோ உணவு தானியம் மற்றும் ஒரு கிலோ பருப்பு அடுத்த இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். சாலையோரங்களில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள் 50 லட்சம் பேருக்குக் கடனுதவி கிடைக்கும் விதமாக, ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

வங்கியில் கடன்பெற்று வீடு வாங்குவோருக்கான மத்திய அரசு மானியம், 'ஒரே நாடு- ஒரே ரேஷன்' திட்டம் மூலம் உணவுப் பொருட்கள், நபார்டு மூலம் அவசர பணி முதலீடாக கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி ஆகியவை நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் பயன்பெற உதவும் என்றார். நகர்ப்புற ஏழைகளுக்குக் குறைந்த விலையில் தங்குவதற்கு வாடகை வீடுகள், 100நாள் வேலை திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு, பழங்குடியின மக்களுக்கு காம்பா நிதி என்ற பெயரில் ரூ.6 ஆயிரம் கோடி ஆகியவையும் அறிவிக்கப்பட்டன.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்க வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பேரிடர் சமயத்து செயல்பாடாக இதைப் பார்க்க முடியாது என்கிறார்கள் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், குறைந்தபட்சம் 10 ஊழியர்களைக் கொண்டிருந்தால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். உண்மையில் இந்த அறிவிப்பு மிகத் தாமதமானது. மேலும், 10 ஊழியர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரக் கணக்கான நிறுவனங்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்று தங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

உதட்டைப் பிதுக்கும் வல்லுநர்கள் 

பேரிடரும், பொருளாதார நெருக்கடியும் இறுக்கிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் மக்களின் பார்வை அரசின் பக்கம் குவிவது இயல்பான ஒன்றுதான். ஆனால், மத்திய அரசோ, மிகப்பெரிய ஒரு தொகையைக் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். காரணம், ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்த ரூ.4.5 லட்சம் கோடி, மத்திய அரசு அறிவித்த ரூ.1.70 லட்சம் கோடி இரண்டுமே தற்போதைய தொகுப்பிற்குள் அடங்கிவிடும் என்று மோடி அறிவித்துவிட்டார். மோசமான பொருளாதார சூழல்களில் ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்குக் குறைந்த விகிதத்தில் கடன் கொடுத்து, நிலைமையை சரிசெய்யும். அப்படியான செயல்பாட்டைக் கூட இந்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பிற்குள் வைத்திருக்கிறது மோடி அரசு.

ஏற்கனவே, வங்கிகள் கடன்கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால், மே 13 ஆம் தேதி வரை ரூ.5.47 லட்சம் கோடியைக் கடனாகக் கொடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆக, மத்திய அரசு வார்த்தைக்கு வார்த்தை கடன் என்று குறிப்பிடும் பட்சத்தில், அதன் பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்பின் மதிப்பு ரூ.14.53 லட்சம் கோடியாகச் சுருங்கிவிடுகிறது. இப்போதிருக்கும் நெருக்கடியில் வங்கிகள் கடன் கொடுக்க முன்வரும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. இ.எம்.ஐ. ஒத்திவைப்புக்கான மத்திய அரசின் அறிவிப்புக்கு வங்கிகள் கொடுத்த மரியாதையே அதற்கு உதாரணம். அதேபோல், வங்கிக்கடன் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னருக்குப் பதிலாக நிதியமைச்சர் வெளியிடுகிறார்.
 

http://onelink.to/nknapp


அரசு தனது அறிவிப்பில் தனக்குச் சம்மந்தமேயில்லாத பி.எஃப். விகிதக் குறைப்பைத் திட்டமாகச் சொல்கிறது. மொத்தத் திட்டத்திற்கான செலவு என்னவென்று நிதியமைச்சர் சொல்லவில்லை. அறிவிப்புகளை அலசினால், அரசுக்கான புதிய செலவு வெறும் 50 ஆயிரம் கோடிக்குள் அடங்கிவிடும் போலிருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

என்னதான் தீர்வு? 

பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்தான், அமைப்புசாரா தொழில்களின் ஆணிவேர்கள். அவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கே வேலைக்கு செல்வது அரிதான காரியம். அவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை தருவோம் என்கிறது மத்திய அரசு. ஆனால், நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும்? தொழில் நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகை ஒருபுறம், தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப் போவது மறுபுறம் எனத் தொழிற்துறையே புதிய பரிணாமத்திற்குள் சென்று அச்சுறுத்துகின்றன. இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

வங்கிகள் கடன் தந்து தொழில் உற்பத்தியே பெருகினாலும், மக்களின் வாங்கும் திறனே முக்கியம் என வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அன்றாடப் பிழைப்புக்கு ஏங்கும் மக்களிடம் பணம் இல்லையென்றால், உற்பத்தி அனைத்தும் வீணாகும். அரசின் திட்டங்களும் பாழாகும். எனவே, வருமான வரி செலுத்தாத மக்களை இனங்கண்டு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.7,500ஐ உடனடியாக டெபாசிட் செய்யவேண்டும். இதற்கு வெறும் ரூ.3.5 லட்சம் கோடி மட்டுமே செலவாகும்என்று வலியுறுத்துகிறார்.

பசியோடு சாலைகளில் நடந்து செல்பவர்கள்தான், இந்தியாவின் உண்மை முகத்தைக் காட்டுகிறார்கள். அந்த இந்தியாவை பசியிலிருந்து காப்பாற்றுமா மோடி மேஜிக்?

-ச.ப.மதிவாணன்
 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.