Skip to main content

அபிநந்தன் எப்படி நடத்தப்படவேண்டும்? ஜெனிவா ஒப்பந்தம் சொல்வது இதுதான்

Published on 28/02/2019 | Edited on 28/02/2019
abinandhan


புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா 26-02-2019 அன்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனைத் தொடர்ந்து 26ஆம் தேதி மாலை மற்றும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது இந்தியா. இந்நிலையில் 27ஆம் தேதி காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்திய எல்லைக்குள் இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்பச் சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இந்திய வான்படையை சேர்ந்த எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 
 

இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர், அபிநந்தன் திரும்ப வராததை இந்திய அரசும் உறுதிப்படுத்தியது. மேலும் பாகிஸ்தானில் அவர் சிக்கிய இடத்தில் ஒரு குழுவினர் அவரை அடித்து இழுத்துச் செல்வது போன்ற வீடியோவும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பின்னர், அந்த குழுவினரிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தால் மீட்கப்பட்டு, அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை இறுதியாக அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விசாரிப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் அபிநந்தன் "பாகிஸ்தான் ராணுவத்தினர் என்னை கௌரவமாக நடத்துகின்றனர்" என்று தெரிவித்தார். ஆனால் இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் பாகிஸ்தான் இந்த வீடியோவை வெளியிட்டு, ஜெனிவா ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என கண்டனம் தெரிவித்தது. இன்னொரு புறம் இரண்டு நாடுகளிலும் ட்விட்டரில் ‘சே நோ டு வார்’ #saynotowar என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இது மட்டுமல்லாமல் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி பிடிபட்ட அபிநந்தன் விரைவில் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுதப்போரின்போது, ஒரு நாட்டின் ராணுவ வீரர் எதிரி நாட்டிடம் அவர்களது எல்லைக்குள் சிக்கிக்கொள்ளும்போது அவர் போர் கைதி என அறிவிக்கபப்டுவார். இரு நாடுகளுக்கு இடையேயான போர் மற்றும் போர் கைதிகளை கையாளும் விதிமுறைகள் குறித்தும் இந்த ஜெனிவா ஒப்பந்தம் பேசுகிறது. 
 

geneva


ஜெனிவா ஒப்பந்தம்

1864ஆம் ஆண்டுதான் முதல் ஜெனிவா ஒப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்டது. அது, காயம்பட்ட ராணுவ வீரர்களை எப்படி நடத்தப்பட வேண்டுமென நெறிமுறைகளை வழங்கியுள்ளது. 1846ஆம் ஆண்டு முதல் ஜெனிவா ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் 1906, 1929,1949 ஆகிய ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டது.

இரண்டாவது ஜெனிவா ஒப்பந்தம் கடலில் போர் செய்வோர் மற்றும் போரில் காயம்பட்ட வீரர்கள் குறித்து பேசுகிறது.

மூன்றாவது ஜெனிவா ஒப்பந்தத்தில், போர் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 1929ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, 1949ஆம் ஆண்டு அவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டன. நான்காம் ஜெனிவா ஒப்பந்தம் 1949ஆம் ஆணடில் வந்தது. அதில் போரின்போது மக்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பின்னர், 1977 ஆண்டு புரோட்டோக்கால் ஒன்று, இரண்டு என இரண்டாகப் பிரித்து நெறிமுறைகள் சேர்க்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு மூன்றாவது புரோட்டாக்கால் உருவாக்கப்பட்டு நெறிமுறை சேர்க்கப்பட்டது.

ஜெனிவா ஒப்பந்தத்தின்படி ஒரு போர் கைதி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படை கோட்பாடுகள் இவைதான்...

கைது செய்யப்பட்ட வீரர்களை போரில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்துவதே நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை துன்புறுத்தக் கூடாது.

போர் முடிந்த உடனேயே கைது செய்யப்பட்ட போர் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டு வைத்திருக்கும் சிறையில் அவர்களை மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும்.

போர் கைதிகளிடம் வன்முறையை கையாளக் கூடாது மற்றும் அவர்களை தரக்குறைவாக நடத்த கூடாது.

சிறையில் அவர்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு வீரர்கள், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதிலுக்காக அவர்களை அச்சுறுத்தவோ, மோசமாக நடத்தவோ கூடாது.

போர்க்குற்றம் நடந்திருக்கும் வாய்ப்பிருந்தால், அதற்காக போர்க்கைதிகளிடம் கைது செய்து வைத்திருக்கும் நாடு விசாரணை நடத்தலாம். ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி, போரில் நடந்த வன்முறை குறித்து விசாரணை செய்யக்கூடாது.

 


 

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
CBI raids house of ex-governor who criticized PM Modi who Pulwama incident issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

மணிப்பூர் விவகாரம்; கலவரத்தை ஒடுக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிபுணர் நியமனம்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Appointment of surgical strike specialist to quell riots in manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும்  மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுவதிருந்தது.

 

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிப்பூர் உள்துறை இணைச் செயலர் விடுத்துள்ள அறிக்கையில், “மிகவும் சவாலான சூழ்நிலையில் துல்லியமான திட்டமிடல், முன்மாதிரியான துணிச்சல், தைரியமான நடவடிக்கையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்” எனக் கூறப்பட்டுள்ளது. 

 

கர்னல் சஞ்சன்பாம், கடந்த 2015 ஆம் ஆண்டு மியான்மரில் இந்தியா நடத்திய ராணுவப் படையின் மிகவும் துல்லிய தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.