Skip to main content

கட்சியினரின் உள்ளடி வேலை! துரோகிகளை களையெடுங்கள்! திமுக விசுவாசிகள் குரல்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
ddd

 

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் ஒரு பங்கு இடத்தினை எதிர்க்கட்சிகள் பிடித்துள்ளன. அதிலும் தி.மு.க 173 தொகுதிகளில் போட்டியிட்டு 125 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் 49 இடங்களில் தோல்வி என்பதை தி.மு.க.வினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோல்வியடைந்த தொகுதிகளில் ஏன் தோல்வி என்பதை கட்சி தலைமை தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற குரல்கள் தி.மு.க.வினரிடம் எழுந்துள்ளன.

 

"கொங்கு மண்டலம் எனப்படும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 68 தொகுதிகள் உள்ளன. இதில் 44 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் சில தொகுதிகளில் இந்தமுறை தி.மு.க தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் சாதி வாக்குகள் மட்டுமல்ல சொந்தக் கட்சியினரின் உள்ளடி வேலையும் பின்னணியில் இருக்கிறது. அதனால் இதில் தலைமை தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்த நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்காக 46 தனித்தொகுதிகள் உள்ளன. இந்த தனித்தொகுதிகளில் எப்போதும் அ.தி.மு.க தனிக்கவனம் எடுத்து செயல்படுகின்றது என தேர்தலுக்கு முன்பே நக்கீரன் எச்சரித்தது. எச்சரிக்கைக்குப் பின்பும் தி.மு.க. பெரியளவில் கவனத்தை செலுத்தவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 46 தனித்தொகுதிகளில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதியிருந்த 27 இடங்களில் நேரடியாக போட்டியிட்டோம். அ.தி.மு.க, கூட்டணி கட்சிகளுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு மீதி யிருந்த 38 இடங்களில் அதுவே போட்டியிட் டது. தேர்தல் முடிவில் தனி தொகுதிகளில் மட்டும் தி.மு.க. கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் அ.தி.மு.க மட்டும் 17 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

 

2011-ல் 46 தனி தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 2016-ல் அ.தி.மு.க 32 இடங்களிலும், தி.மு.க 14 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும்போது தனித்தொகுதி களில் தி.மு.கவின் வெற்றி பெரியது தான். அதேநேரத்தில் தி.மு.க சுலபமாக வெற்றி பெறவேண்டிய தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே குறிப்பிட்டதுபோல் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்து தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது கே.வி.குப்பம், அரூர், திண்டிவனம் போன்ற தொகுதிகளில் உட்கட்சி பிரச்சனையும், வேட்பாளர் தேர்வுமே குளறுபடி'' என்கிறார்கள் தி.மு.க பிரமுகர்கள்.

 

"கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை, சேலம் மாவட்டங்களில் படுதோல்வி யடைந்தது ஏன் என்கிற கேள்வியோடு எம்.பியும், கழக சட்டத்துறை செயலாளருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒரு குழுவை அமைத்து நேரடியாக கள விசாரணைக்கு அனுப்பியுள்ளார் தி.மு.க தலைவரான முதல்வர் ஸ்டாலின். அந்த டீமும் உன்னிப்பாக அனைத்தையும் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மற்ற மாவட் டங்களில் தோல்வியடைந்த தொகுதிகளில் ஏன் தோல்வி என்பதை விசாரணை நடத்த வேண்டும். தி.மு.க போட்டியிட்ட ஆரணி, போளூர், கே.வி.குப்பம், திண்டிவனம், மயிலம், கிருஷ்ணகிரி, பென்னாகரம் போன்ற தொகுதிகளும் அரக்கோணம், வாணியம்பாடி போன்ற கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் தி.மு.க பலமாகவுள்ள தொகுதிகள். இங்கெல்லாம் தி.மு.க தோல்வியடைய காரணம், கட்சியில் உள்ள துரோகிகள் தான். அந்த துரோகிகள் யார் என்பது வேட்பாளர்களுக்கு, கட்சியின் தீவிர விசுவாசிகளுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் விசாரித்து துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

2018-ல் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை அறிவாலயத்துக்கு அழைத்து நேரடியாக சந்தித்து தங்கள் பகுதியில் கட்சியில் உள்ள பிரச்சனைகளை கேட்டார். புகார் பெட்டி வைத்து தொண்டர்களின் மனநிலையை அறிந்தார் தலைவர் ஸ்டாலின். அந்த புகார்களை தலைமை கழக நிர்வாகிகளை வைத்து ரகசிய விசாரணை நடத்தி, தவறு செய்த நிர்வாகிகளை கட்சி பதவிகளில் இருந்து மாற்றம் செய்து டம்மியாக்கினார். அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதேபோல் இப்போதும் நடக்காமல், தவறு செய்த நிர்வாகிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், ஆட்சிக்கு வந்துவிட்டால் கட்சி வளர்ந்துவிடாது. தொய்வான பகுதியில் கட்சியை வளர்க்க தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். அதற்கு முதலில் துரோகிகளை களையெடுக்க வேண்டும். சாதி, மதங்களை கடந்து மண் மீது, மொழி மீது, கட்சி மீது, மக்கள் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இயக்கத்துக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கட்சி இன்னும் வலிமையடையும்'' என்கிறார்கள்.

மக்களின் நலன் காக்கும் முதல்வர் கட்சித் தொண்டர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்வாரா?

 

 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.